Saturday, January 11, 2014

வேகமாக சென்ற பறக்கும் தட்டு: லண்டனில் பெரும் பரபரப்பு

வேகமாக சென்ற பறக்கும் தட்டு: லண்டனில் பெரும் பரபரப்பு


லண்டன் ஹீத்ரூ விமானநிலையத்திற்கு மேற்கே பெர்க்‌ஷைர் பகுதிக்கு அண்மிய பகுதியில் 34 ஆயிரம் அடி உயரத்தில் ஏ-320 ஏர்பஸ் பயணிகள் விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது.

அப்போது விமானத்தின் மேலே இடது புறமாக சில அடி தூரங்களில் ரக்பி பந்து வடிவில் ஒரு பறக்கும் தட்டு கடந்த சென்றுள்ளது. பின்னர் அது மின்னல் வேகத்தில் பைலட்டை நோக்கியும் வந்து சென்றுள்ளது.


உடனே இது குறித்து லண்டன் விமானக்கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து பரபரப்படைந்த லண்டன் விமான நிர்வாகம் அதுகுறித்து ஆராய்ந்து வருகிறது.

எனினும் எந்த நவீன கண்காணிப்பு ரேடார் கருவிகளிலும் அந்த மர்ம பொருள் பற்றிய பதிவு தெரியவில்லை என்றும் டெலிகிராப் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

சவுதியில் விமானத்தோடு பறந்த உடல் உறுப்புகள்

சவுதியில் விமானத்தோடு பறந்த உடல் உறுப்புகள்


சவூதி அரேபியாவில் பறந்த விமானத்திலிருந்து மனித உடல் உறுப்புகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எல்லைத் தாண்டிச் செல்லும் பலர் கிடைக்கும் விமானத்தில் ஏறி விரைவது சவூதி விமான நிலையங்களில் வழக்கமாக உள்ளது.


இந்நிலையில் ஜெட்டா விமானம் பறக்கும்போது மனிதரின் உடல் உறுப்புகள் கீழே விழந்துள்ளன.

இதுகுறித்து பொலிஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் பின் நசீர் கூறுகையில், அதிகாலை 2.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. முஷ்ரபா பகுதியில் மனித உடல் உறுப்புகள் விமானத்திலிருந்து விழுந்ததாக அந்தத் தகவல் வந்தது.

இதையடுத்து நாங்கள் அங்கு விரைந்து சென்று பார்த்த போது விமானத்தின் லேன்டிங் கியர் பகுதியிலிருந்து உடல் உறுப்புகள் விழுந்ததாக தெரியவந்துள்ளது என்றும் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார்.

சீனாவில் ஆறு டன் யானை தந்தங்கள் அழிப்பு

சீனாவில் ஆறு டன் யானை தந்தங்கள் அழிப்பு


வெள்ளை தங்கம் என்றழைக்கப்படும் யானை தந்தங்கள் கடத்தலில் உலகின் மிகப்பெரிய சந்தையாக சீனா விளங்குகிறது.

கடந்தாண்டு மட்டும் தந்தங்களுக்காக 35 ஆயிரம் யானைகள் கொல்லப்பட்டுள்ளன. ஒரு கிலோ கிராம் யானை தந்தம் கள்ள சந்தையில் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சட்டவிரோதமாக வாங்கும் இந்த தந்தங்களை, மக்கள் தாங்கள் விரும்பும் பொருட்களுக்கு மாற்றி வீட்டில் வைத்து அழகு பார்க்கின்றனர். இவ்வாறு யானைகள் கொல்லப்படுவது குறித்து கவலையடைந்த சீனா அரசு, அதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


இதில் கைப்பற்றப்பட்ட 6 ஆயிரம் கிலோ யானை தந்தங்களை பொது இடங்களில் வைத்து நேற்று சீனா அழித்தது. அழிக்கப்பட்ட இந்த தந்தங்கள் சீனாவில் பிடிபட்டுள்ள யானை தந்தங்களின் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது.

மற்ற நாடுகள் இதுபோன்று யானை தந்தங்களை அழித்ததையடுத்து சீனாவும் பொது இடத்தில் வைத்து அழித்துள்ளது. இருந்தும், எவ்வளவு டன் தந்த குவியல்கள் அங்கு இருக்கிறது என்று தகவல் வெளியிடப்படவில்லை.

மூன்று வயது சிறுமியின் கடைசி அன்பளிப்பு

மூன்று வயது சிறுமியின் கடைசி அன்பளிப்பு


கனடாவில் கார் விபத்தில் பலியான சிறுமியின் உடல் உறுப்புகளை, அவளது தந்தை தானமாக வழங்கியுள்ளார்.

கனடாவின் வின்னிபெக்கை சேர்ந்த லாசும், அவரது குடும்பத்தினரும் விடுமுறைக்காக கடந்த டிசம்பர் மாதம் 28ம் திகதி மினெபோலிஸ் மியூசியத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.


லா வேறொரு வண்டியில் செல்ல, இவரது மனைவியும், மகளும் டிரக் வண்டியில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எல்லையை கடந்த சிறிது நேரத்தில், அவர்கள் சென்ற டிரக் வண்டி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து லாவுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, விரைந்து வந்தவர் மகள் மரணமடைந்தது தெரிந்து அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமது குடும்பத்திற்கு ஏற்பட்டது போன்று மற்ற எந்த குடும்பத்திற்கும் ஏற்படக்கூடாது, இதையே எனது மகளும் விரும்புவாள்.

அன்பும், அக்கறையும் கொண்ட அருமையான குழந்தை.

அவள் தன்னால் முடிந்த அளவு உடல் உறுப்புகளை தானமாக அளித்து விட்டு சென்றுள்ளாள் என மிகுந்த சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் உலகத்திற்கு அவளது கடைசி அன்பளிப்பு அவளது ஆரோக்கியமான உடலுறுப்புகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பணம் ஏன் சும்மா இருக்கனும்? ரூ.17 லட்சத்தை கொளுத்திய சகோதரிகள்

பாகிஸ்தான் நாட்டில் ரூ.17 லட்சத்தை சகோதரிகள் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் பிலால் நகரைச் சேர்ந்தவர்கள் நஹீத்(40), ரூபினா(35). சகோதரிகளான இவர்கள் 3 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தேசிய வங்கிக்கு சென்று ரூ.17 லட்சத்தை எடுத்துள்ளனர்.

பின்னர் அவர்கள் பணத்தைப் போட்டு தீவைத்து எரித்துள்ளனர், இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தடுப்பதற்குள் முழுப் பணமும் எரிந்து போய் விட்டது.

மேலும், அந்த சகோதரிகளில் மூத்தவர் கையில் இருந்த பிஸ்டலை எடுத்து அக்கம் பக்கத்தினரை மிரட்டவும் செய்ததால் அவர்கள் அருகில் போக அஞ்சினர். பணத்தைக் காப்பாற்ற வந்தவர்களைப் பார்த்து, இது எங்கள் பணம். இதை என்ன வேண்டுமானாலும் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது. யாரும் அருகில் வரக் கூடாது, வந்தால் சுட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளார்.

இந்த தகவலானது பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில், இந்த சகோதரிகளின் தந்தை பெயர் ராஜா முகம்மது இக்பால். இவர் சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.


இவரது சொத்தை விற்றுத்தான் ஒரு வருடத்திற்கு முன்பு ரூ. 28 லட்சம் பணத்தைப் சகோதரிகள் பெற்றனர் . வங்கியில் போட்ட அந்த பணத்தில் இருந்துதான் ரூ. 17 லட்சத்தை எடுத்து தீவைத்து எரித்துள்ளனர்.

இரு சகோதரிகளும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர்களுக்கு இரு தம்பிகளும் உள்ளனர், ஆனால் அவர்களுடன் இவர்கள் சேர்ந்து வசிக்கவில்லை. தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர் மேலும் இவர்கள் இருவரும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று இவர்களது வீட்டுக்கு அருகே வசித்து வருபவர்கள் கூறியுள்ளனர்.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்