Tuesday, December 24, 2013

காற்று நுழைய முடியாத கண்ணாடி அறை - புதிர்

உங்களை ஒரு சதுரமான அறைக்குள் அனுப்பிவிட்டு கதவைப் பூட்டிவிடுகின்றார்கள்.. அந்த அறைக்கு சன்னல்கள் எதுவுமே இல்லை...........மூச்சு விடவே கொஞ்சம் சிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அந்த அறையைக் கொஞ்சம் பார்ப்போமா? 

அந்த அறையின் மேல் கூறை அதாவது சீலிங் முழுவதும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. நான்கு பக்கச் சுவர்கள் முழுவதுமே அதே போலவே கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. பற்றாக் குறைக்கு தளமும் கண்ணாடிதான். அந்த அறைக்குள் வேறு எதுவுமே இல்லை.


நீங்கள் கிழக்கு பக்கமாக நின்றுகொண்டு எதிரில் உள்ள சுவறைப் பார்க்கின்றீர்கள்.
இப்போது உங்கள் கண்களுக்கு உங்கள் பிம்பங்கள் எத்தனை பிரதிபலிக்கும்????

கண்ணாடி என்று சொல்லிவிட்டேன். அது எப்படிப்பட்ட கண்ணாடி என்று அடுத்தாற்போல் நீங்கள் கேள்வியை எழுப்புவீர்கள் என்று தெரியும். அதனால் விளக்கமாக நானே கூறிவிடுகின்றேன்.

பின்னால் பாதரசம் பூசப்பட்ட பிரதிபலிக்கும் [ முகம் பார்க்கும் கண்ணாடிபோல] கண்ணாடிதான்.

நன்பர்களே.............இப்போது எனது கேள்விக்கு பதிலைக் கூறுங்களேன்!!!!!

புதிர் விடை :


"அறையில் ஒரு கதவைத் தவிர எதுவுமே இல்லை.அந்தக் கதவும் பூட்டப்பட்டுவிடுகின்றது.மூச்சுவிடக் கூட சிரமம்"

அறையின் உள்ளே நான்கு புறங்களிலும் சுவர். அதுவும் கண்ணாடிச் சுவர்....மேலேயும், கீழேயும் அதுபோலவே கண்ணாடிச் சுவர். உள்ளே நுழைந்ததும் கதவு பூட்டட்டப்படுகின்றது. வேறு சண்ணலும் கிடையாது. 

ஆக அந்த அறைக்குள் வெளிச்சம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.அதனால்தான் மூச்சு விடுவதற்குக் கூட சிரமம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

இப்போது புதிருக்கான விடையைப் பார்ப்போம்.
எந்த ஒரு பிம்பமுமே...ஒளி இல்லாவிட்டால் பிரதிபலிக்காது.
அதனால் நீங்கள் அந்த அறையின் உள்ளே சென்று கதவு பூட்டப்பட்டதும், உங்களால் எந்த பிம்பத்தையுமே பார்க்க இயலாது.

பவளத்தீவு அரசன் மணிமாறன் மற்றும் அவனது மந்திரி மதியழகன் - புதிர் கதை

முன்னொரு காலத்தில் பவழத்தீவை மணிமாறன் என்ற அரசன் ஆண்டு வந்தான்.அந்த அரசனுக்கு, மதியழகன் என்ற அமைச்சனும் இருந்தான்.ஒரு நல்ல நாளில் அரசனுக்கும் , பக்கத்து நாட்டு இளவரசிக்கும் திருமணம் நடந்தது.....திருமணம் முடிந்தபிறகு, ஆட்சிப் பொருப்பை முழுவதுமாக அமைச்சன் மதியழகனிடம் ஒப்படைத்துவிட்டு அரசன் அந்தப்புரமே கதியாகக் கிடந்தான்.  

ஆனால் நாட்டு மக்களோ அமைச்சன் மதியழகனது சூழ்ச்சியால்தான் அரசன் ஆட்சிப் பொருப்பைக் கவனிக்காமல் இருப்பதாக பேசிக்கொண்டார்கள்.நல்லவனான அமைச்சன் இதை அறிந்தான். வருந்தினான்....அரசனைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்து நல்லாட்சி நடத்தவைக்க என்ன வழி என்று ஆலோசனை செய்தான்.


முடிவில், அரசனிடம் சென்று, " அரசே நான் புனிதப் பயணம் மேற்கொள்ளப் போகிறேன். நான் திரும்பி வரச் சில மாதங்கள் ஆகும். எனக்கு விடை கொடுங்கள். " என்றான்.

அரசன் எவ்வளவோ வற்புறுத்தியும் தனது முடிவை மாற்றிக்கொள்ளாத அமைச்சன் புனிதப் பயணம் புறப்பட்டான்.நம்பிக்கைக்கு உரியவர் வேறு யாரும் இல்லாததினால், அரசனன்று முதல் ஆட்சியைக் கவனித்தான். மக்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்..

பயணம் புறப்பட்ட அமைச்சன் மதியழகன், பல ஊர்களைக் கடந்து, ஒரு துறை முகத்தை அடைந்தான். அங்கிருந்த கப்பலில் ஏறிக்க்கொண்டு வேறு நாட்டுக்குப் பயணம் தொடங்கினான்.

கப்[பல் நடுக்கடலில் வந்துகொண்டிருந்தபோது, சிறிது தொலைவில் நீர்ப் பரப்பின் நடுவே இருந்து ஒரு மரம் மேலே ந்ழும்பியது.அந்த மரத்தின் கிளையில் ஒரு பேரழகு வாய்ந்த பெண் ஒருத்தி அமர்ந்துகொண்டு யாழ் மீட்டிப் பாடினாள். மிக இனிமையாகப் பாடினாள். அமைச்சன் வியப்புடன் அந்த அதிசயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோதே அந்தப் பெண் மரத்துடன் நீருக்கு அடியில் சென்று மறைந்துவிட்டாள்.இதைக்கண்டு வியப்படந்த அமைச்சன் , கப்பல் தலைவனிடம் இது பற்றிக் கேட்டான்.

அதற்கு கப்பல் தலைவன், " இந்தப் பகுதிக்கு எப்போது வந்தாலும் நாங்கள் காணும் அதிசயக் காட்சி இது. எங்களுக்கு மிகவும் பழக்கமான ஒன்று" என்றான்.அதன் பிறகு பல நாடுகளைச் சுற்றிவிட்டு தனது பயணத்தை முடித்துக்கொண்டு அமைச்சன் நாடு திரும்பினான்.. அவனை அன்புடன் வரவேற்ற அரசன் நீண்ட நாள் பிரிவை, பலவகையாகப் பேசி தீர்த்துக்கொண்டான். அதன் பிறகு அமைச்சனிடம், அவன் பல நாடுகளுக்கும் சென்றபோது, அங்கே ஏதாவது அதிசயத்தைக் கண்டதுண்டா? என்து கேட்டான்.

அதற்கு அமைச்சன் எதையும் மறைக்காமல், தான் கடலின் நடுவில் கண்ட அற்புத மங்கையைப் பற்றிக் கூறினான். அதைக் கேட்ட அரசன் தான் எப்படியாவது அந்தப் பெண்ணைப் பார்த்தே ஆகவேண்டும் என்று அமைச்சனை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு கப்பலில் ஏறி பயணம் செய்தான்.

அந்தக் குறிப்பிட்ட பகுதியை அடைந்ததும், வழக்கம்போல் கடலின் உள்ளே இருந்து மரம் வெளிப்பட்டது. அழகு மங்கை யாழ் இசைத்துக்கொண்டிருந்தாள்.உடனே அரசன் கப்பலை விட்டுக் கடலில் குதித்தான். நீந்திச் சென்று அந்தப் பெண் இருந்த மரத்தில் ஏறினான்.அரசன் மரத்தில் ஏறியதும், அவனையும் சேர்த்து கடலின் உள்ளே மூழ்கிய மரம், கடலின் ஆழத்தில் இருந்த ஒரு குகைக்குக் கொண்டு போனது.யாழ் மீட்டிய நங்கையைப் பார்த்த அரசன் , தான் அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிவிட்டதாகவும், தான் அரசன் என்றும் , அவளை மணம் புரிந்துகொள்ள விரும்புவதாகவும் கூறினான்.

அதற்கு அவள், " அரசனே,,,,நான் தேவலோகத்து மங்கை. ஒரு சிறிய தவறிழைத்துவிட்டதால் ஏற்பட்ட சாபத்தில் இப்படி நீருக்கடியில் வாழ்கிறேன்.தினமும் ஒருமுறை வெளியே வந்து யாழ் மீட்டுவேன். அப்போது யாராவது துணிவுடன் என்னை அனுகினால், அவரையே மணம் செய்து இரண்டு ஆண்டுகள் அவருடன் வாழ்ந்துவிட்டு, மறுபடியும் தேவலோகம் சென்றுவிடுவேன்.இதுதான் எனது சாப விமோசனம். இப்போது தாங்கள் வந்துவிட்டீர்கள். விரைவில் எனக்கு விமோசனம் கிடைத்துவிடும்� என்றாள்.

அரசனும் அவளை மணந்தான். தனது நாட்டுக்கு அழைத்துவந்தான். அவளுடன் அரசன் மகிழ்வுடன் வாழ்ந்தான். மறுபடியும் அமைச்சனையே ஆட்சியைப் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு அரசன் அந்தப்புரமே கதியாகக் கிடந்தான். அவளது சாப விமோசன நாளும் வந்தது. அவளை அழைத்துச் செல்ல தேவ குரு வந்தார். அரசன் அவள் மேல் கொண்டுள்ள காதலைக் கண்டு, இரக்கப்பட்டு, அரசனது ஆயுட் காலம் முழுவதும் அவள் அங்கேயே தொடர்ந்து இருக்க அனுமதி அளித்தார். அரசி தேவலோகம் செல்லப்போவதை எண்ணி மனக்கவலை அடைந்திருந்த அரசனும், நாட்டு மக்களும் இதைக் கேட்டு அளவில்லாத மகிழ்வடைந்தார்கள்.

ஆனால் அந்த அமைச்சன் மதியழகன் அன்று இரவே தற்கொலை செய்துகொண்டான்.அனைவரும் மகிழ்வடைந்தபோது, அமைச்சன் மட்டும் மனம் வெதும்பி தற்கொலை செய்துகொண்டது ஏன்?

புதிர் விடை :

தேவலோக மங்கை வாழ்நாள் முழுவதும் அரசனோடு இருக்கலாம் என்பதால் இனிமேல் அரசன் அந்தபுரத்தை விட்டு எந்த புறமும் போகமாட்டார். அமைச்சர் மதியழகனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு அங்கே சந்தோசமாக இருப்பார்.

ஆனால் மக்கள் மதியழகனைத் தான் பழிப்பார்கள், எல்லாம் மதியழகனால் வந்தது, அவரால் தான் அரசனுக்கு தேவலோக மங்கை கிடைத்தார், அரசன் அந்தபுரத்திலேயே அடங்கி கிடக்கிறார் என்று தூற்றுவார்கள். மேலும் மதியழகன் இல்லை என்றால் கண்டிப்பாக அரசன் ஆட்சியை ஏற்று நடத்துவார் என்பதால் மனம் வெம்பி தற்கொலை செய்து கொண்டார்.

கருப்பசாமியும், கண்ணம்மாளும் ! - புதிர்

கருப்பசாமியும், கண்ணம்மாளும் கணவன் மனைவி. இரவு 9 மணிக்கு ஹாலில் அமர்ந்திருந்தார்கள். கருப்பசாமி தொலைக்காட்சியில் மெட்டி ஒலி  தொடர் பார்த்துக் கொண்டிருந்தான்.கண்ணம்மாள் ஏதோ முக்கியமாகப் படித்துக்கொண்டிருந்தாள். 

திடீரென்று மின்சாரம் நின்றுபோகவே வீட்டில் இருள் சூழ்ந்தது. 

கருப்பசாமி தொலைக்காட்சித் தொடர் பார்க்க இயலாமல் போனதால் வீட்டின் உள்ளே சென்று மெழுகுவர்த்தியோ அல்லது வேறு விளக்கோ கிடைக்குமா என்று பார்த்தான்.


எதுவுமே கிடைக்கவில்லை. சரி படுத்துத் தூங்கவாவது செய்யலாம் என்று கண்ணமாளை அழைத்தான்.படிப்பதை நிறுத்திய அவள், தான் வரவில்லை என்றும் படிக்கவேண்டியது இன்னும் பாக்கி இருக்கிறது என்றும், முழுதும் படித்தபிறகு வந்து படுத்துக்கொள்வதாகவும் கூறினாள்.

சரி என்று கருப்பசாமி போய்ப் படுத்துக்கொண்டான்.

கண்ணம்மா புத்தகம் முழுவதும் வாசித்தபிறகுதான் போய்ப் படுத்தாள்.

நண்பர்களே மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்திருந்த அறையில் இது அவளுக்கு எப்படி சாத்தியம் ஆனது?

புதிர் விடை :

அவர் கண் பார்வையற்றவராக இருந்திருக்க வேண்டும் , பிரெய்லி முறையில் படித்துக் கொண்டிருந்திருக்கலாம்.

ஒரு ஏழைத்தொழிலாளி , ஒரு நீதிபதி மற்றும் ஒரு புத்திசாலி பெண்மணி ! - புதிர் கதை

ஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். 

ஒருநாள் அவனது நண்பன் ஒருவன் அங்கு வந்தான். வந்தவன் வருமையில் வாடும் அவனது நிலையைக் கண்டு, " நண்பனே....ஏன் இப்படி இங்கேயே இருந்து வருமையில் வாடுகிறாய்?.உன்னைப் போன்ற உண்மையாக உழைக்கும் தொழிலாளிக்கு பக்கத்து நாட்டில் நல்ல மரியாதையும், வருமானமும் கிடைக்கிறது.ஒரே வருடத்தில் கைநிறையப் பணம் சம்பாதித்துக்கொண்டு திரும்பிவிடலாம். " என்றான்.

அதைக் கேட்ட அவனும், தனது மனைவி மக்களை உறவினரிடம் ஒப்படைத்துப் பார்த்துக்கொள்ளும்படி கூறினான். பிறகு பக்கத்து நாட்டுக்குப் புறப்பட்டுப் போனான்.

அங்கே அவனுக்கு நகரின் தெருக்களைத் தூய்மை செய்யும் பணி உடனே கிடைத்தது.மாதத்துக்கு இரண்டு பொற்காசுகள் சம்பளமும், இருக்க இடம் மற்றும் உணவும் அவர்களே வசதி செய்து கொடுத்தார்கள்.அவ்ஙே வசித்தவர்களும் அவ்வப்போது அவனுக்கு அன்பளிப்புகள் கொடுத்தார்கள்.. அதனால் சிலா மாதங்களுக்குள், அவன் பத்து பொற்காசுகள் சேர்த்துவிட்டான். நூறு பொற்காசுகள் சேர்ந்ததும் தன் நாட்டுக்குப் போகலாம் என்று தீர்மானித்திருந்தான். ஆனால் பத்து பொற்காசுகளை கையில் வைத்திருப்பது அவனுக்குப் பாதுகாப்பாகத் தெரியவில்லை. அதனால் நம்பிக்கையான யாரிடமாவது பொற்காசுகளைக் கொடுத்து வைக்கலாம் என்று முடிவு செய்தான்.


அந்த ஊரில் ஒரு நீதிபதி இருந்தார். அவரிடம் கொடுத்துவைத்தால் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து . அவரிடம் சென்று பத்து பொற்காசுகளைக் கொடுத்து, மேலும் சேமிக்கும் பணத்தையும் அவ்வப்போது தருவதாகவும், தான் நாட்டுக்குப் போகும்போது மொத்தமாகக் கொடுத்துவிடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டான். நீதிபதியும் சரி என்று வாங்கிக்கொண்டார்.


மேலும் சில மாதங்கள் கழிந்தன. கடுமையான உழைப்பின் பயனாக விரைவிலேயே நிறைய பொற்காசுகள் சேமித்தான். மனதில் கணக்குப் போட்டுப் பார்த்து நூறு பொற்காசுகள் சேர்ந்திருக்கும் என்று தெரிந்ததும், தனது நாட்டுக்குச் செல்ல முடிவு செய்தான். நீதிபதியிடம் சென்றான். தான் சேமித்து வைத்த பொற்காசுகளைக் கொடுத்தால் தான் நாடு செல்வதாகக் கூறினான்.


நீதிபதியின் மனதில் சாத்தான் புகுந்துகொண்டான்,அவனை ஏமாற்றிவிடலாம் என்று நினைத்து, அவனை ஏற இறங்கப் பார்த்து , " எந்தப் பணத்தை நீ என்னிடம் கேட்கிறாய்"? என்றார். அதற்கு அவன் " ஐயா....நான் தங்களிடம் சிறுகச் சிறுகக் கொடுத்துவைத்திருந்த பணம்தான் " என்றான். அவரோ கோபம் கொண்டு, " ஏய்.....நீ என்னிடம் எந்தப் பணமும் கொடுக்கவில்லை. உனக்கென்ன புத்தி பேதலித்துவிட்டதா????....நீயாக ஓடிவிடு, இல்லையென்றால் வேலைக்காரர்களை அழைத்து உன்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவேன்" என்றார்.

இதைக் கேட்டதும் அவனுக்கு உலகமே இருண்டது. வேலியே பயிரை மேய்ந்தால் தான் யாரிடம் சென்று முறையிடுவது என்று புலம்பியபடி சோகமாக வேலைக்குத் திரும்,பினான்.வழக்கமாக அவன் சுத்தம் செய்யும் தெருவில் இருந்த ஒரு பெண்மணி அவன் சோகமாக இருப்பதைக் கண்டு, என்ன விபரம் என்று விசாரித்து, நீதிபதி அவனை ஏமாற்றிய விஷயத்தைத் தெரிந்துகொண்டாள். அவன்மீது இறக்கம் கொண்ட அவள் " ஐயா அழவேண்டாம்.....கவலைப்படாமல் இருங்கள். இன்று மாலை நான் நீதிபதியின் வீட்டுக்குள் செல்வேன். நீங்கள் சிறிது நேரம் கழித்து அங்கே வந்து, நீதிபதியிடம் நான் உங்களிடம் கொடுத்து வைத்திருந்த நூற்றைம்பது பொற்காசுகளைக் கொடுங்கள் நான் ஊருக்குப் போகவேண்டும் என்று கூறுங்கள்.. அவர் கண்டிப்பாகத் தருவார்.நூறு பொற்காசுகளுக்குப் பதிலாக நூற்றைம்பது பொற்காசுகளுடன் நீங்கள் உங்கள் ஊருக்கு மகிழ்வுடன் செல்லலாம்" என்றாள்.

மாலை நேரம் வந்தது.அந்தப் பெண்மணி நீதிபதியின் வீட்டுக்குள் நுழைதாள். அவளைக் கண்ட நீதிபதி, " அம்மணி நீங்கள் யார்?. என்னால் உங்களுக்கு எதுவும் ஆகவேண்டுமா? என்று கேட்டார். அதற்கு அவளும் தலையசைத்து, ஆமாம் என்று கூறி, தனது கணவன் வெளியூர் சென்றிருப்பதாகப் பேச ஆரம்பித்தவள் மேலும் சில விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தாள்.

அப்போது ஏழைத் தொளிலாளி உள்ளே வந்தான். வந்தவன் நீதிபதியைப் பார்த்து, " ஐயா, நான் கொடுத்த நூற்றைம்பது பொற்காசுகளைக் கொடுங்கள் நான் ஊருக்குச் செல்லவேண்டும்" என்றான்.அவன் நூற்றைம்பது பொற்காசுகள் என்று சொன்னதும் முதலில் கடும் கோபம் அடைந்தாலும், சாமர்த்தியமாக அதைப் புண்ணகையால் மறைத்துக்கொண்டு, " அடடே....நீ காலையிலேயே சொன்னாய் அல்லவா?....இதோ உள்ளது உனது பணம்" என்று அவன் கேட்டபடியே நூற்றைம்பது பொற்காசுகளைக் கொடுத்து அனுப்பினார்.

அப்போது ஒருவன் உள்ளே வந்தான்...."அம்மா.... வெளியூர் சென்றிருந்த உங்கள் கணவர் வந்துவிட்டார். உங்களைக் கூப்பிட்டு வரச்சொன்னார்" என்றான்....அவளும் நீதிபதியைப் பார்த்து, " ஐய்யா எனது கணவர் வந்துவிட்டார்....உங்களை அடுத்து அவசியம் ஏற்படும்போது வந்து பார்க்கிறேன்" என்று கூறியபடி சென்றுவிட்டாள்.

நீதிபதி தலையில் துண்டைப் போட்டபடி மிகவும் வருத்தத்துடன் அமர்ந்துவிட்டார்.

நண்பர்களே.....அந்தப் பெண்மணி நீதிபதியிடம் அப்படி என்னதான் கூறினாள்?. ஏழைத்தொளிலாளி தான் கொடுத்து வைத்திருந்ததைவிட அதிகமாகவே கேட்டும் ஏன் அவனுக்கு உடனே கொடுத்து அனுப்பினார்.

புதிர் விடை :

அந்த பெண்மணி நீதிபதியிடம் சென்று, அய்யா, என் கணவர் வெளியூர் சென்றிருக்கிறார், அவர் என்னிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்க சொன்ன 1000 பொற்காசுகளை உங்களிடம் கொடுத்து பத்திரப்படுத்தி வைக்க நினைக்கிறேன், அவர் வந்ததும் நீங்கள் திருப்பிக் கொடுங்கள் என்று சொல்லியிருப்பார்.

அதே நேரத்தில் நம்மவர் வந்து 150 பொற்காசுகள் கேட்க, அதை கொடுக்கவில்லை என்றால் இந்த பெண்மணி தன்னை நம்ப மாட்டார் என்று நினைத்து அவர் கேட்ட 150ஐ கொடுத்து விட்டார்.

மாறுவேடத்தில் அரசனும் , ஒரு காவலாளியும் அவனது மர வாளும் ! - புதிர் கதை

ஒரு அரசர் வழக்கம்போல் மாறுவேடத்தில் இரவில் நகர் உலா வந்து கொண்டிருந்தார்..அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்த முக்கிய வீதியில் காவலாக இருந்த காவலாளி ஒருவனைக் கண்டார்.....அவனிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார்.மிகவும் கலகலப்பாகவும் சாதுர்யமாகவும் பேசிய அவன் மேல் அரசர் ஈடுபாடு கொண்டார். 

வந்திருப்பது அரசன் என்று அறியாமல், கொஞ்ச நேரம் பேசியதும் அந்தக் காவலாளி, " நாம் இருவரும் நண்பர்களாகிவிட்டோம்.இந்த நல்ல பொழுதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.வாருங்கள் பக்கத்தில் உள்ள மதுக்கடைக்குப் போய் மது அருந்துவோம்" என்றான்.

அதற்கு மாறுவேடத்தில் இருந்த அரசர், " பாதுகாவல் பணி புரியும் நீ, அதை விட்டுவிட்டு, மதுக்கடைக்குப் போகலாம் என்கிறாயா?....ஏதேனும் நடந்துவிட்டால் நீ சிக்கலில் மாட்டிக்கொள்வாயே"? என்றார்.


அதற்கு அவன், " ஒன்றும் நடக்காது. பக்கத்தில்தான் மதுக்கடை உள்ளது.இந்தத் தெருவில் சிறிய சப்தம் கேட்டால்கூட, நான் உடனே வரமுடியும். அதனால் வாருங்கள் போகலாம்" என்றான்.

அரசனும் அவனுடன் சென்றார். முதன்முறை இருவரும் சிறிதளவு குடித்தார்கள். மேலும் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தக் காவலாளிக்கு ஏற்பட்டது.ஆனால் அவனிடம் பணம் போதுமானதாக இல்லை.அதனால் தனது உடைவாளை இடுப்பில் கட்டியிருந்த உறையில் இருந்து எடுத்து மதுக்கடைக்காரனிடம் கொடுத்து , " இதை ஈடாக வைத்துக்கொண்டு மேலும் மது கொடுங்கள். காலையில் வந்து பணத்தைக் கொடுத்துவிட்டு வாளை வாங்கிக் கொள்கிறேன்" என்றான். அதற்கு கடைக்காரனும் சம்மதித்து, வாளைப் பெற்றுக்கொண்டு மது வகைகளைக் கொடுத்தான்..அதைக் கண்ட அரசர், " இது தவறல்லவா?..ஏதேனும் அவசரம் என்றால் வாள் இல்லாமல் நீ என்ன செய்வாய்" என்று கேட்டார்.

அதற்கு அவன், சிரித்தபடி பக்கத்தில் கிடந்த மரப்பலகை ஒன்றை எடுத்து, வாள் போலச் செய்து வாள் உறையில் வைத்துக்கொண்டே"அந்த வாளுக்குப் பதிலாக இந்த மரவாள் ஒன்றை வைத்துக்கொண்டே நிலைமையை நான் சமாளிக்கமுடியும். நீங்கள் கவலைப்படவேண்டாம்" என்றான்.

இருவரும் குடித்து முடித்து வெளியில் வந்தார்கள். காவலாளியிடம் விடை பெற்ற அரசர், ரகசிய வழியாக அரண்மனை திரும்பினார்.

சிறிது நேரத்தில் அரண்மனையில் ஆராய்ச்சி மணி அடிக்க ஆரம்பித்தது. 
ஏதேனும் அவசரம் இருந்தால்தான் அந்த மணி ஒலிக்கும் என்பதினால், அரண்மனைக்குப் பக்கமாகக் காவல் இருந்த வீரர்கள் அனைவரும் அரண்மனைக்கு ஓடினார்கள். 

அங்கே அரசர் ஒரு அமைச்சரை எதிரில் நிற்கவைத்து, கோபமாக ஏதோ கூறிக்கொண்டே, காவலாளிகளைப் பார்த்தார். 
மதுக்கடையில் வாளை ஈடாக வைத்த காவலாளியும் அங்கே நின்றான். அவனை அடையாளைம் கண்டு கொண்ட அரசன், அவனை அழைத்து, " வீரனே,,,,,,எனக்குத் துரோகம் செய்த இந்த அமைச்சனை உடனே என் கண்ணெதிரிலேயே உன் வாளால் வெட்டிக்கொன்றுவிடு. இது அரச கட்டளை" என்றார்.

அந்தக் காவலாளிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான். தன்னிடம் இருப்பது மரவாள் என்று அரசனுக்குத் தெரிந்தால், முதலில் தன் தலைதான் உருளும் என்று அவனுக்குத் தெரியும். அதனால், " அரசே..........அமைச்சர் எந்தத் தவறும் செய்திருக்கமாட்டார். தீர விசாரித்தபிறகு நாளைக் காலையில் தாங்கள் தண்டனை அளிக்கலாமே" என்றான்.

அதைக் கேட்டதும் அரசன் உள்ளுக்குள் நகைத்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், சூழ்நிலையை அவன் எப்படிச் சமாளிக்கப் போகிறான் என்று பார்க்கும் ஆவலில், " எனக்கே அறிவுரை சொல்கிறாயா???????
.நீ உன் வாளை எடுத்து உடனே அமைச்சனை வெட்டி வீழ்த்தாவிட்டால், மற்றக் காவலாளிகள் உனது தலையை வெட்டிவிடுவார்கள்.... என்றார்.

இந்த நேரத்தில் ஒரு யுக்தி அவனுக்குப் பளிச்சிட்டது. அதன்படி செய்தான் அந்தக் காவலாளி. அவனது யுக்தியைக் கண்ட அரசன் அமைச்சரை விடுதலை செவதாகக் கூறினான்.

பிறகு அவனது புத்தி சாதுர்யத்தை மெச்சிய அரசன், தான் அவனது புத்திசாலித்தனத்தைச் சோதிக்கவே இந்த நாடகத்தை நடத்தியதாகக் கூறி, அவனை பாராட்டினார். 
ஆனால் அவன் வாளை ஈடாக வைத்து கடமை செய்யும் நேரத்தில் மது அருந்திய குற்றத்துக்காக, அதற்குரிய தண்டனையை 
அனுபவித்தபின்பு, அவனையும் தனது அமைச்சர்களில் ஒருவனாக வைத்துக்கொண்டார்.


நண்பர்களே..................காவலாளி அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து என்ன யுக்தி செய்து தானும் அமைச்சரையும் தப்பிக்க வைத்தான்.?

புதிர் விடை :

இந்த அமைச்சர் நேர்மையானவராக இருந்தால் அவரைக் கொன்ற பழி என்னைச் சாரும். ஆகையால் இவர் நல்லவராக இருந்தால், இறைவா! இந்த வாளை மரவாளாக மாற்று" என்று சொல்லியிருப்பான். 

சித்தம் கலங்கிய மெசபடோமியா நாட்டு அரசனும் , ஒரு புத்திசாலி இளைஞனும் ! - புதிர் கதை

மெசபடோமியா நாட்டைச் சேர்ந்த அரசன் ஒருவனுக்கு திடீரென்று சித்தம் கலங்கி விட்டது. தன்னை ஒரு காளை மாடாக நினைத்துக்கொண்டான். அந்த நாட்டில் காளைகளைக் கொன்று உண்பது வழக்கத்தில் இருந்தது.  

அரசனும், " நான் ஒரு மாடு . என்னைக் கொன்று அனைவரும் உண்டு மகிழுங்கள். என்னை வெட்டுங்கள்.உண்ணுங்கள்" என்று எந்த 
நேரமும் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தான். அனைவரும் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தார்கள். அரண்மனை மருத்துவரை அழைத்து விபரம் கூற , அவரும் அரசனுக்கு வந்துள்ள சித்தக் கலக்கத்தை சுலபமாகப் போக்கிவிடலாம். அதற்கு சக்தி வாய்ந்த மருந்துகள் உள்ளன என்று கூறிவிட்டு, மருந்தினைத் தயார் செய்தார்.


மருந்தை அரசனுக்குக் கொடுத்தபோது அவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, என்னை எப்போது வெட்டப் போகிறீர்கள் என்பதையே கிளிப்பிள்ளை போலத் திருப்பிச் திருப்பிச் சொல்லிக்கொண்டு பட்டினியாகவே கிடந்தான். அதனால் அவனது உடல் நலம் மேலும் சீர்கெட்டது. அரசனை எப்படியாவது சாப்பிட வைத்துவிடவேண்டும் என்று பலரும் பலவிதமாக முயற்சித்தும் தோல்வியே அடைந்தார்கள்.  

அப்போது அவிசென்னி என்ற ஒரு புத்திசாலி இளைஞன் இதைப் பற்றிக் கேள்விப்பட்டான். "அரசனை நான் சாப்பிட வைத்துவிடுவேன்" என்று கூறிக்கொண்டு அரண்மனைக்கு வந்தான். அமைச்சர்களும் அவனை அரசனிடம் அழைத்துச் சென்றனர்.

அரசனைப் பார்த்த அவிசென்னி, முதலில் அரசனது பேச்சுக்களை முழுமையாகக் காதில் வாங்கிக் கொண்டான். பிறகு அரசனை தொட்டுப் பார்த்தபடி அரசனிடம் சில வார்த்தைகளைப் பேசினான். பின்பு காவலாளிகளைப் பார்த்து சில கட்டளைகளைப் பிறப்பித்தான். அவன் கூறியபடி காவலாளிகள் செய்ததும் அரசன் மிகுந்த ஆர்வமுடன் சாப்பிட ஆரம்பித்தான். 

அதன் பிறகு மருத்துவர் அரசனது உணவுடன் மருந்தினையும் சேர்த்துக் கொடுத்தார். ஒரு மாத காலத்தில் அரசன் சித்தக் கலக்கம் நீங்கி முழுமையாகக் குணமடைந்தான்.பிறகு தான் குணம் அடையக் காரணமாக இருந்த அவிசென்னியை அழைத்து, ஆரத் தழுவி, அமைச்சர் பதவி கொடுத்து தன்னுடனேயே வைத்துக்கொண்டான்.


நண்பர்களே.....அவிசென்னி என்ன தந்திரம் செய்து அரசனைச் சாப்பிட வைத்திருப்பான்.??

புதிர் விடை :

அரசர் தன்னை மாடாக நினைத்து பேசுகிறார் என்பது தெரிந்தது...
அவிசென்னி அரசனை தொட்டு.... அனைவரும் நல்ல கொழு கொழு என்றுள்ள மாட்டைத்தான் விரும்பி உண்பர். நீரோ எலும்பும், தோலுமாக உள்ளீர். சில காலம் நல்ல சாப்பாட்டை சாப்பிட்டு உடல் நன்கு தேறினவுடன்.. உங்களை வெட்டி அனைவரும் உண்ணலாம் என்று கூறி.... காவலாளிகளை அரசனை மாடு போல் பாவித்து... மாடுகளுக்கு உணவு பரிமாறும் விதமாக பரிமாற சொல்லியிருப்பான்.... அரசனும் தன்னை மாடாகவே நினைத்து உணவு உண்டு இருப்பான்....

Monday, December 23, 2013

கொக்குக்கு ஒரு கால்தானே ! - புதிர் கதை

கொக்குக்கு ஒரு கால்தானே ! 

வேட்டைக்குச்சென்று திரும்பிய முதலாளி ஒருவர் வேட்டை முடிந்து வீட்டுக்கு வந்ததும், தான் வேட்டையாடிக் கொண்டுவந்திருந்த ஒரு கொக்கைச் சமையல் காரரிடம் கொடுத்து , இரவு உணவுக்கு சுவையாகச் சமைத்து வைக்கும்படி கூறினார்.

சமையல்காரன் அந்தக் கொக்கை உறித்து, பக்குவமாக மசாலா போட்டுக் குழம்பு வைத்தான்.நன்றாக வெந்ததும், குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது.ஆசை அடக்க முடியாமல், கொக்கின் ஒரு காலை எடுத்து ருசி பார்த்தவன், கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கால் முழுவதையும் தின்றுவிட்டான்.உண்ட பின்புதான், முதலாளி கேட்டால் என்ன செய்வது என்ற பயம் ஏற்பட்டது. சரி...சரி எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம் என்று தெம்பாக இருந்தான்.


சாப்பாட்டு நேரம் வந்தது. முதலாளியும் சாப்பிட வந்து அமர்ந்தார்.சோறு போட்டு, கறிக்குழம்பை பறிமாறினான் சமையல்காரன்.சாப்பிட ஆரம்பித்த அவர், கொக்கின் ஒரு காலை எடுத்து ருசி பார்த்தார்.மிகுந்த சுவையாக இருந்ததினால், அடுத்த காலையும் போடச் சொன்னார்.

திகைத்தான் சமையல்காரன். என்ன பேசுவது என்று ஒரு கணம் யோசித்தான்.பிறகு மனதைத் திடப்படுத்திக்கொண்டு, " ஐயா.....கொக்குக்கு ஒரு கால்தானே இருக்கும். நீங்கள் பார்த்ததில்லையா?...எப்படி இல்லாத ஒரு காலைக் கொண்டு வரமுடியும்" என்றான்.

அப்போது சமையல்காரனுடன் வாதிட விரும்பாத முதலாளி, " சரி நாளைக்குக் காலையில் கொக்குக்கு ஒரு கால்தானா? இல்லை இரண்டு கால்களா என்பதைப் பார்த்துக்கொள்வோம்" என்று கூறிவிட்டு உணவை முடித்தார்.

மறுநாள் காலையில், வேலைக்காரனை அழைத்துக்கொண்டு வயல் வெளிப்பக்கமாகப் போனார் முதலாளி. அங்கே குளக்கரைப்பக்கம் இருந்த ஒரு சிறு ஓடையில் கொக்குகள் நின்றிருந்தன.. சமையல் காரனிடம் கொக்குகளைக் காட்டிய முதலாளி " இப்போது நன்றாகப் பார். கொக்குக்கு எத்தனை கால்கள்" என்று கேட்டார்.

"இஅயா...நீங்களே நன்றாகப் பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரு காலில்தானே நிற்கின்றன.
எனவே கொக்குக்கு ஒரு கால்தான்" என்றான் சமையல்காரன்.

"அப்படியா" என்று சிரித்த முதலாளி, சூ....என்று கூறி கொக்குகளை விரட்டினார்.. ஒரு காலில் நின்றிருந்த கொக்குகள் எல்லாம், இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி வானத்தில் எழும்பிப் பறந்தன.

சமையல்காரனை கேலிப் புண்ணகையுடன் பார்த்த முதலாளி " இப்போது என்ன சொல்கிறாய். கொக்குக்கு எத்தனை கால்கள். ஒரு காலா.....அல்லது இரண்டு கால்களா?" என்றார்.

முதலாளி இப்படிக் கேட்டதும் ஒரு கணம் திகைத்த சமையல்காரன் தனது சாதுர்யமான பதிலைக் கூறியதும், முதலாளிக்கு சமையல்
காரன்மேல் இருந்த கோபம் எல்லாம் பறந்துபோனது.

அவனது பதிலை ரசித்துச் சிரித்த முதலாளி, அவன் செய்த தவறை மன்னித்தார்.

நண்பர்களே...................நீங்கள் கூறுங்கள். முதலாளிக்கு சமையல்காரன் என்ன பதில் கூறியிருப்பான்.?

புதிர் விடை :


"ஐயா.....இப்போது நீங்கள் கொக்கைப் பார்த்து சூ........ என்றதும் ஒரு கால், இரண்டு கால்களாக மாறியதே?...அதேபோல நீங்கள் உணவருந்தும்போதும் சூ என்று கூறியிருந்தால் ஒருகால் இரண்டு கால்களாக மாறியிருக்கும்" என்றான்.

ஒரு பேரரசன், ஒரு சிற்றரசன் மற்றும் அவர்களின் வாக்குவாதம் ! - புதிர் கதை

 ஒரு பேரரசன், ஒரு சிற்றரசன் மற்றும் அவர்களின் வாக்குவாதம் ! 

முன்னொரு காலத்தில் ஒரு பேரரசன் தனக்குட்பட்ட சிற்றரசன் ஒருவனது நாட்டுக்குச் சென்றான்.. சிற்றரசனும் அவனுக்கு பெரும் வரவேற்பு அளித்து மரியதை செலுத்தினான். அரண்மனையில் இரு அரசர்களும் அமர்ந்து மகிழ்வுடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள். 

அப்போது பேரரசன், " நண்பரே....உமது நாட்டு முதலமைச்சன் அறிவிற் சிறந்தவர் என்று கேள்விப்பட்டேன். அது உண்மைதானா?" என்று கேட்டான்."உண்மைதான் அரசே"....என்று பதில் கூறினான் சிற்றரசன்.

"அப்படியானால் அந்த அமைச்சனை அழைத்து நம் இருவருக்கும் பால் கொண்டுவரச் சொல்லுங்கள்.!!!!அவன் உண்மையில் அறிவுடையவன்தானா என்பதை நான் கண்டுபிடித்துவிடுகிறேன்" என்றான் பேரரசன்.

உடனே சிற்றரசன் தனது அமைச்சனை அழைத்தான். அவர்கள் இருவரும் அருந்துவதற்குப் பால் கொண்டு வரச்சொன்னான். 

அமைச்சனும் அழகான தங்கத் தட்டில் இரண்டு கோப்பைகளில் பால் ஊற்றி அங்கே எடுத்து வந்தான்.


அப்போதுதான் அமைச்சனுக்கு பால் தட்டை யாரிடம் முதலில் நீட்டுவது என்ற குழப்பம் ஏற்பட்டது."நாம் நமது அரசரிடம் முதலில் 

தட்டை நீட்டினால், பேரரசன் தன்னை அவமானப் படுத்தியதாக நினைத்து கோபம் கொண்டு என்னைக் கொண்று விடுவான். அப்படி இல்லாமல் முதலில் பேரரசருக்குக் கொடுத்தால், நமது அரசன் அவனை அவமானம் செய்ததாக நினைத்து என் தலை எடுத்தாலும் எடுத்துவிடுவான்.என்ன செய்வது. ? இந்த சிக்கலை எப்படிச் சமாளிப்பது?" என்று சிந்தனை செய்தான்.

குறுநில மன்னனுக்கும் அமைச்சனின் சிக்கலான நிலை தெரிந்தது.இருந்தாலும் அமைச்சன் இதை எப்படிச் சமாளிக்கிறான் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் என்று அமைதியாக இருந்தான்.பேரரசனும் அமைச்சன் என்ன செய்யப்போகிறான் என்று அறிந்துகொள்ள ஆவலுடன் காத்திருந்தான்.

ஆனால் அமைச்சன் அடுத்து செய்த செயலால் இரு அரசர்களுமே மிக்க மகிழ்ச்சியடைந்தார்கள்.இருவருக்குமே ஒரே சமயத்தில் பெருமை சேர்க்கும் வண்ணம் அமைச்சன் செயல் அமைந்ததினால் இருவருமே மகிழ்வுடன் அமைச்சனுக்கு பெரும் பரிசுகளை வழங்கினார்கள்.


மன்ற நண்பர்களே.......அமைச்சன் அந்த சிக்கலை எப்படிச் சமாளித்தான்

புதிர் விடை :

சிற்றரசரிடம் இருகோப்பை உள்ள தட்டை கொடுத்து... அவரை பேரரசருக்கு கொடுக்க சொல்லியிருப்பார் 

அரசனும் அவனது இரட்டை குழந்தைகளும் , அரியணை வாரிசு குழப்பமும் ! - புதிர் கதை

அரசனும் அவனது இரட்டை குழந்தைகளும் , அரியணை வாரிசு குழப்பமும் !

ஒரு அரசனுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.. இரண்டுமே ஆண் குழந்தைகள்.  இருவரில் யார் மூத்தவன் யார் இளையவன் என்று யாருக்குமே தெரியாது.இருவருமே அறிவில் சிறந்தவர்களாக விளங்கவேண்டும் என்று அரசன் ஒருவனுக்கு அறிவழகன் என்றும் மற்றவனுக்கு மதியழகன் என்றும் பெயர் சூட்டியதோடல்லாமல், சிறந்த குருவிடம் அவர்களைக் கல்வி பயில ஏற்பாடு செய்தான். 

இருவரும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, இளைஞர்கள் ஆனார்கள்.இருவருமே கல்வியிலும் வீரத்திலும் இனையாக சிறந்து விளங்கினார்கள். இவர்களில் யாருக்கு பட்டம் சூட்டுவது, தனக்குப் பின் அரியனையில் அமர்த்துவது என்று பெரிதும் சிந்தித்தான் அரசன்.அவனால் ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை.

அதனால் தனது மூத்த அமைச்சரை அழைத்தான். " அமைச்சரே, அறிவுள்ள நீங்கள்தான் எனது குழப்பம் தீர வழி காட்ட வேண்டும். இருவரில் யாரை அரியனையில் அமர்த்துவது என்று நீங்கள் ஆராய்ந்து கூறுங்கள்" என்று கேட்டுக்கொண்டான்.
அமைச்சர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

"அரசே.....இளவரசர் யார் என்பதைத் தேர்வு செய்யும் தகுதி உடையவர் எனது குநாதர்தான். அவர் இங்கிருந்து, பத்துக் கல் தொலைவில் உள்ள அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மண்டபத்தில் தங்கி வாழ்ந்து வருகிறார். அவரிடம் உங்கள் முத்திரை மோதிரத்தைத் தருவோம்.அம்மோதிரத்தைப் பெற்று வறுமாறு இளவரசர்கள் இருவரையும் ஒவ்வொருவராக அனுப்பி வைப்போம்.என் குருநாதர் அவர்களின் புத்தி கூர்மையைச் சோதனை செய்து, தகுதியானவரிடம் முத்திரை மோதிரத்தைக் கொடுத்து அனுப்புவார்.முத்திரை மோதிரத்தைக் கொண்டு வருபரே அரியனையில் அமரத் தகுதியானவர் என்று நாம் கொள்வோம்" என்றார்.


அரசனும் இத் திட்டத்தை ஏற்றுக்கொண்டான்.மதியழகனை அழைத்தார்.அவனிடம் விபரம் கூறி அமைச்சரின் குருவைச் சந்தித்து, அவரிடம் தான் கொடுத்துள்ள முத்திரை மோதிரத்தைப் பெற்று வரும்படி அனுப்பி வைத்தான்.

மதியழகன் அம்மன் கோவில், ஆயிரம் கால் மண்டபம் சென்றான். அங்கே ஒருவர் அமர்ந்திருந்தார். தனக்குத் தானே சிரித்துக்கொண்டு, ஏதேதோ பேசிக்கொண்டு அவர் இருந்தார். அவரிடம் சென்ற மதியழகன், " எங்கே அந்த முத்திரை மோதிரம். என்னிடம் கொடு . நான் அரசனின் மகன். முத்திரை மோதிரத்தை வாங்கிப் போவதற்காக வந்திருக்கிறேன்" என்றான்.

அங்கிருந்தவரோ சிரித்துக்கொண்டே , " இராவணின் கடைசி முகம்........வீட்டைத் தாங்கி நிற்கும்.........வேதத்தின் பெயர்......வேடன் கையில் இருப்பது......" என்று ஒன்றுக்கொன்று சம்பத்தம் இல்லாமல் கூறிக்கொண்டே இருந்தார்.

மதியழகன் எத்தனையோ முறை கேட்டபொதும், அவனுக்கு இந்த பதிலையே கிளிப்பிள்ளை கூறுவதுபோலக் கூறிக்கொண்டிருந்தார்.அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அரண்மனைக்குத் திரும்பினான். அரசர் கேட்டதற்கு, " அப்பா....அங்கே ஒரு பைத்தியக்காரந்தான் இருக்கிறான். ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் எதோ உளறிக்கொண்டிருக்கின்றான்" என்றான்.

அரசன் அடுத்தாற்போல் அறிவழகனை அனுப்பிவைத்தார். அறிவழகன் அந்த ஆயிரம் கால் மண்டபத்தை அடைந்தான்."ஐயா முத்திரை மோதிரம் வேண்டும்" என்று கேட்டான்.அவனுக்கும் "இராவணின் கடைசி முகம்........வீட்டைத் தாங்கி நிற்கும்.........வேதத்தின் பெயர்......வேடன் கையில் இருப்பது......" என்று கூறினார். 

இதைக் கேட்ட அறிவழகன், இவர் கூறுவதில் ஏதோ பொருள் இருக்கிறது என்று ஊகித்தான்.அந்தப் பொருளைக் கண்டுகொண்டால், முத்திரை மோதிரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று புரிந்துகொண்டான்.தீவிரமாகச் சிந்தனை செய்தான்.முடிவில் முத்திரை மோதிரம் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து, மோதிரத்துடன் அரண்மனை வந்தடைந்தான். 

நடந்ததை அறிந்த அரசன் மிக்க மகிழ்வுடன், அறிவழகனையே இளவரசனாக பட்டம் சூட்டினான்.

நண்பர்களே மோதிரம் இருந்த இடத்தை அறிவழகன் எப்படிக் கண்டுபிடித்தான்.?

புதிர் விடை :


முனிவர் இருக்கும் இடத்தைத்தான் கூறியுள்ளார். அது ஆயிரம் கால் மண்டபமாதலால் அதிலிருந்த தூண் ஒன்றில் வைத்திருந்தார்.

இராவணனின் கடைசி முகம் - பத்தாவது
வீட்டைத் தாங்கி நிற்பது - தூண்
வேதத்தின் மற்றோர் தமிழ்ப்பெயர் - மறை
வேடனின் கையில் இருப்பது - வில்.

பத்தாவது தூண் மறைவில் இருந்தது முத்திரை மோதிரம்.

Saturday, December 21, 2013

வரதட்சணையாக 10 லட்சம் Likes கேட்ட மாமனார்

வரதட்சணையாக 10 லட்சம் Likes கேட்ட மாமனார்


ஏமனில் தந்தை ஒருவர், தனக்கு வரப்போகும் மருமகனிடம் பேஸ்புக்கில் 10 லட்சம் லைக்சை வரதட்சணையாக கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏமனில் உள்ள தாய்ஸ் நகரைச் சேர்ந்தவர் சலீம் ஆயஷ், கவிஞர்.


இவர் தனக்கு வரப்போகும் மருமகனிடம் வித்தியாசமான ஒன்றை வரதட்சணையாக கேட்டுள்ளார்.

அதாவது, தனது மகளை திருமணம் செய்ய வேண்டும் என்றால் தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு 10 லட்சம் லைக்ஸ் பெற வைக்க வேண்டும் என்பதையே அந்த வரதட்சணையாகும்.

தற்போது சலீம் ஃபேஸ்புக் பக்கத்தை 30 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

10 லட்சம் லைக்சை பெற இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடாஃல்ப் ஹிட்லரின் கௌரவ குடியுரிமை ரத்து

அடாஃல்ப் ஹிட்லரின் கௌரவ குடியுரிமை ரத்து

ஜேர்மன் சர்வாதிகாரி அடாஃல்ப் ஹிட்லரின் கௌரவ குடியுரிமையை தெற்கு ஜேர்மனியிலுள்ள சிறிய நகரம் ஒன்று ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

அடாஃப்ல்ப் ஹிட்லர், 1933ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை ஜேர்மனின் சர்வாதிகாரியாய் திகழ்ந்தார்.

ஹிட்லரை அரச தலைவராக நியமித்தவர் பால் வான் ஹைண்டன்பர்க்.


இருவருக்குமான கௌரவ குடியுரிமையை தெற்கு ஜேர்மனியிலுள்ள சிறிய நகரமா டியட்ராம்செல் (Dietramszell) ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதற்கு முதலில் கவுன்சில் மறுப்பு தெரிவித்ததால், மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

அதாவது, உள்ளூர் கவுன்சிலிங் உறுப்பினர் குழு சரித்திரத்தை மாற்றி எழுதும் வேலை தங்களுக்கு இல்லை என்றும், இது சர்சைக்குரிய நிலைக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்து இப்பிரச்சையில் தலையிடாமல் போனது.

ஆனால் இப்போது இதுபற்றி கடும் போராட்டம் நிகழ்வதால் மக்களின் இக்கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய தீர்மானித்தனர்.

இதனையடுத்து இரண்டாவது சிறப்புக் கூட்டத்தில் குழுமிய அவ் உறுப்பினர்கள் தங்களது முந்தைய முடிவுக்கு மன்னிப்பு கோரி அதை மாற்றிக்கொண்டு இவ்விருவரின் குடியுரிமையை பறிக்கும் நடவடிக்கைக்கு முழுமனதாக ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

உலோக பொருட்களை கவர்ந்திழுக்கும் காந்த சிறுவன்

உலோக பொருட்களை கவர்ந்திழுக்கும் காந்த சிறுவன்


பிரேசிலை சேர்ந்த 11 வயது சிறுவன் பாலே டேவிட் அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளான். இந்த சிறுவன் அதி பயங்கர காந்த சக்தி சிறுவனாக உள்ளான்.அந்த சிறுவனுக்கு இந்த விடயம் தான் பிரச்சனையாக உள்ளது. அவன் நடந்து செல்லும் பாதையில் உள்ள இரும்பு பொருட்கள் தானாக ஒடி வந்து ஒட்டிக் கொள்கின்றன.


கத்திகள், இடுக்கிகள், கத்திரிக்கோல் மற்றும் உலோக பொருட்கள் அனைத்தும் அவரை தேடி வந்து ஒட்டிக்கொள்கின்றன என்று தந்தை ஜீனியர் கூறுகிறார். இதே போன்ற சாதனையை குரோஷியாவை சேர்ந்த சிறுவன் இவான் ஸ்டோஜிகோவிக் நிகழ்த்துவது குறித்தும் ஆச்சரியம் ஏற்பட்டு உள்ளது.

குரோஷியா சிறுவன் ஏறக்குறை 25 கிலோ எடையுள்ள உலோக பொருளை சுமக்கும் திறன் பெற்றவனாக உள்ளான். சிறுவன் பாலே செல்லும் பள்ளிக்கூடத்தில் சிறுவர்கள் உடலில் அதிக பொருட்களை சுமக்க வலியுறுத்துகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில் இது போன்று பார்த்தது இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

உலகை வியக்கவைத்த ‘எக்ஸ்-ரே கண்ணழகி’

உலகை வியக்கவைத்த ‘எக்ஸ்-ரே கண்ணழகி’


நமது உடலின் உள்ளுறுப்புகளில் உள்ள கோளாறுகளை அறிய நவீன மருத்துவ உலகில் எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்ட எவ்வளவோ புதுமையான மருத்துவ பகுப்பாய்வு முறைகள் தோன்றி விட்டன.ஆனால், 1987ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள சரன்ஸ்க் என்ற இடத்தில் பிறந்த நிகோலெயவ்னா நடாஷா டெம்கினா என்ற பெண் தனது வெறும் கண்களாலேயே மனித உடலின் உள்ளுறுப்புகளை உடுருவி பார்க்கும் பிரமிக்கத்தக்க ஆற்றல் பெற்றவளாய் திகழ்ந்தாள்



தனது பத்தாவது வயதில் தாயின் உடல் உள்ளுறுப்புகளை உடுசக்தி மூலம் வெறும் கண்ணால் பார்க்க தொடங்கிய இவரது புகழ் காலப்போக்கில் உலகம் முழுவதும் படர்ந்து பரவியது.இதையடுத்து, இவரிடம் உள்ள அற்புத சக்தியை அறிந்த உள்ளூர் மக்கள், இவரது பார்வை பட்டாலே நோய் குணமாகிவிடும் என நம்பத்தொடங்கி டெம்கினாவை வீடுதேடி படையெடுக்க தொடங்கினர்.

டாக்டரின் வயிற்றின் எந்த பகுதியில் ‘அல்சர்’ கட்டி உள்ளது என்றும், மற்றொரு பெண்ணின் உடலில் உள்ளது புற்றுக் கட்டி அல்ல என்றும் தீர்க்கமாக கூறி இவர் மருத்துவ நிபுணர்களையே திகைக்க வைத்துள்ளார்.உலகின் பல்வேறு நகரங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய டெம்கினா, இதைப்போன்ற சிறப்பாற்றல் படைத்த ஒரே பெண்ணாக அறியப்படுகிறார்.
இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள : http://en.wikipedia.org/wiki/Natasha_Demkina

மொபைல் வைரஸ் எச்சரிக்கை 2014ல் மூன்று மடங்காகப் பெருகும்

மொபைல் வைரஸ் எச்சரிக்கை 2014ல் மூன்று மடங்காகப் பெருகும்


இன்று ஆன்ட்டி வைரஸ் குறித்து ஆய்வு நடத்தி, அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை உலக அளவில் விற்பனை செய்து வரும் நிறுவனங்களில்,மெக் அபி மற்றும் நார்டன் நிறுவனங்களுக்கு அடுத்த நிலையில் ட்ரெண்ட் மைக்ரோ இயங்குகிறது. இந்நிறுவனம் அண்மையில் விடுத்த அறிக்கையில், ஸ்மார்ட் போன்கள், குறிப்பாக ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் தற்போது இந்த விஷயத்தில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு இணையாக இயங்கு கின்றன.


எனவே இவற்றில் பரவும் வகையில் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளை உருவாக்குவது ஹேக்கர்களுக்கு மிக எளிதாக உள்ளது. இந்த ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் மாத காலத்தில் மட்டும், மால்வேர் புரோகிராம்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு பெருகியுள்ளது என ட்ரெண்ட் மைக்ரோ தெரிவித்துள்ளது. ஏற்கனவே 30,000 என்ற எண்ணிக்கையில் இருந்த இவை, இக் காலத்தில் 1,75,000 என்றளவில் உயர்ந்தன.


இவை மிகவும் ஆபத்தானவையாகவும் உலவி வருகின்றன. தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புதல், தொடர்ந்து எரிச்சலூட்டும் வகையில் விளம்பரங்களைக் காட்டுதல், ஸ்பேம் எனக் கண்டறிந்து விலக்க முடியாத வகையில், குப்பை தகவல்களைத் தருதல் என இவற்றின் செயல்பாடுகள் உள்ளன. மொபைல் வழி பேங்க் அக்கவுண்ட் செயல்பாடுகளை மேற் கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, 2015 ஆம் ஆண்டில், இவற்றில் இடை புகுந்து நிதி மாற்றம் குறித்த தகவல்களைத் திருடி, பயனாளர்களுக்கு நிதி இழப்பு வரை மேற்கொள்ளும் வைரஸ்கள் நிறைய வெளியாகலாம் எனவும் ட்ரெண்ட் மைக்ரோ எச்சரித்துள்ளது.

* மொபைல் வைரஸ் எச்சரிக்கை..! 2013 ஆம் ஆண்டு இறுதியில் ஏறத்தாழ 3,50,000 வைரஸ்கள் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் இருந்தன. 2014ல் இவை மூன்று மடங்காகப் பெருகும் எனவும் அறியப் பட்டுள்ளது. எப்படி விண்டோஸ் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் களில் இடம் பிடித்ததோ, அதே போல ஆண்ட்ராய்ட் சிஸ்டம், மொபைல் போன் களில் இடம் பிடிக்கும்.

* ஆனால், வைரஸ் மற்றும் மால்வேர் வடிவமைப்பவர்கள் இதற்கெல்லாம் தயங்குபவர்களாக இருக்கப் போவதில்லை. எனவே, நாம் தான் அதிகக் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்
இதனால், அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்பவர், ஒருமுறைக்கு பல முறை சிந்தித்த பிறகே, அதனை இன்ஸ்டால் செய்திடுவார்.

* புதிய அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்கையில் காட்டப்படும் எச்சரிக்கை செய்தி பெட்டியினையும், அதில் உள்ள தகவல்களையும் தெளிவாகக் காட்டும் வகையில் கூகுள் தந்து வருகிறது. அனுமதி கேட்கும் வழிகள் எந்த மறைமுக செய்தியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது.

* கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பினைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அப்ளிகேஷன்களை இந்த வகையில் ஸ்கேன் செய்திட புதிய வழிகளை Bouncer என்ற முறையில் கூகுள் கொண்டு வந்தது. தற்போது அதிகம் புழங்கும் அண்மைக் காலத்திய சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் பதிப்பில் இது வழங்கப்பட்டது.

* எனவே, மால்வேர் புரோகிராம்கள் வடிவமைப்பவர்கள், இவற்றை தங்கள் இலக்காகக் கொண்டு இயங்கி வருகின்றனர். மேலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வடிவமைப்பின் குறியீடுகள் அனைவருக்கும் கிடைக்கும் என்பதுவும் இதில் அவர்களுக்குச் சாதகமான அடித்தளத்தைக் கொடுக்கிறது.

நன்றி : v4tamil

சாம்சங் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான கேம்பேட் (Gamepad) அறிமுகப்படுத்தியுள்ளது

சாம்சங் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான கேம்பேட்  (Gamepad) அறிமுகப்படுத்தியுள்ளது



ஸ்மார்ட் கைப்பேசிகளில் ஹேம்களை இலகுவாக விளையாடுவதற்காக பல்வேறு நிறுவனங்கள் கேம்  பேட்களை (Game pad) அறிமுகப்படுத்தியுள்ளன.எனினும் முதன் முறையாக தனது ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான கேம்பேடினை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங்.

அன்ரோய்ட் இயங்குதளத்தைக் கொண்ட சாம்சங் ஸ்மார்ட் கைப்பேசிகளிலும் 4 அங்குலத்திலிருந்து 6.3 அங்குலம் வரையான தொடுதிரையினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளிலும் இச்சாதனம் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது. 



Thursday, December 19, 2013

ஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் ! - புதிர் கதை

பொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். 

ஒருநாள் மாலை நேரம்.அரசனும் அரசியும் உறங்கும் கட்டில் மெத்தையை அவர்களது வேலைக்காரன் சரி செய்ய வந்தான்..மெத்தை விரிப்புகளை தட்டிப் போட்டபின்பு, முல்லை மல்லிகை மலர்களை மெத்தையில் பரப்பினான்.பிறகு இனிய மணம் வீசும் ஊதுபத்திகளை ஏற்றிவைத்தான்.வேலையை சரியாக முடித்துவிட்டோமா என்று மெத்தையை ஒருதரம் சரிபார்த்தான்.


மெத்தையின் அழகும், அந்த அறையில் இருந்த இனிய நறுமணமும் அவனது சிந்தையையை மயக்கியது.'அரசனும் அரசியும் படுக்க வருவதற்கு எப்படியும் நிறைய நேரம் இருக்கிறது. அதற்குள் சிறிது நேரம் மெத்தையில் படுத்து, அந்த சுகத்தை நான் அனுபவித்தால் என்ன?' என்ற்ற நினைவு அவன் மனதில் பீரிட்டது.ஆவலை அடக்க இயலாத வேலைக்காரன் மெத்தையின் ஒரு ஓரத்தில் படுத்தான். அப்படியே அசந்து உறங்கிவிட்டான்.

சிறிது நேரம் கழிந்தது.அரசி படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.அறையின் மங்கலான வெளிச்சத்தில் படுக்கையில் படுத்திருப்பது அரசன்தான் என்று நினைத்து, பக்கத்தில் படுத்தாள்.அரசன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். அதனால் அவரை எழுப்பவேண்டான் என்று நினைத்து மெத்தையில் ஒரு ஓரத்திலேயே படுத்து உறங்கிவிட்டாள்.

பிறகு சிறிது நேரம் கழித்து அரசன் படுக்கை அறைக்குள் வந்தான்.படுக்கையில் இருவர் படுத்திருப்பது தெரிந்தது.நம் படுக்கையில் யார் படுத்துள்ளது என்ற கேள்வியுடன் விளக்கு வெளிச்சத்தை அதிகப்படுத்தினான்.அங்கே அரசியுடன் வேலைக்காரன் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான் அந்த அதிர்ச்சி கடும் கோபமாக மாறியது."உங்கள் இருவரையும் என்ன செய்கிறேன் பார்" என்று கத்தினான்.

அரசனின் இடிபோன்ற குரலைக் கேட்டு அரசியும் வேலைக்காரனும் பதறி எழுந்தார்கள்.அப்போதுதான் வேலைக்காரனுக்கு உண்மை உரைத்தது. தன்னை அரசன் என்று நினைத்து அரசி பக்கத்தில் படுத்துவிட்டார்கள் போலிருக்கிறது.

இதைப் பார்த்த அரசன் வேறுவிதமாக நினைத்துவிட்டான்.எப்படியும் தனக்கு கடும் தண்டனை கொடுக்காமல் விடமாட்டான். குற்றமில்லாத அரசியையாவது காப்பாற்றுவோம் என்று முடிவு செய்த வேலைக்காரன், அரசனின் கால்களில் விழுந்து " அரசே, ஏதோ ஒரு ஆசையால் தங்கள் படுக்கையில் படுத்துவிட்டேன். அதற்காக தாங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். அரசியார் எனக்குத் தாய் போன்றவர்கள்.அரசர்தான் படுத்துள்ளார் என்று எண்ணி என் பக்கத்தில் படுத்துவிட்டார்கள். அவர்கள் மீது எந்த தவறும் இல்லை. தாங்கள் எனக்குத் தண்டனை கொடுத்து அரசியை மன்னித்துவிடுங்கள்" என்று கெஞ்சினான்.

கோபம் இன்னும் உச்சத்தை எட்ட " என்னடா புதுக்கதை அளக்கிறாய்.?நீயும் அவளும் ஒரே மெத்தையில் இருந்ததை என் கண்ணால் பார்த்தேன்.கண்களைவிடச் சிறந்த சாட்சி இருக்கிறதா??.நீங்கள் இருவருமே நாளை தூக்கில் தொங்கப் போகிறீர்கள்" என்று கத்தினான்.

நடந்ததை அறிந்த அமைச்சர் அரண்மனைக்கு ஓடி வந்தார். அங்கிருந்த நிலைமையைப் புரிந்துகொண்டார். அரசனைப் பார்த்து, " கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். அதனால் நடந்தது என்ன என்று இருவரிடம் கேட்போம். தவறு இருந்தால் தண்டனை கொடுப்போம்" என்றார்.

அமைச்சர் குறுக்கிட்டதை விரும்பாத அரசன், " அமைச்சரே இருவரும் ஒரே படுக்கையில் இருந்ததை நான் எனது கண்களால் பார்த்தேன்.என் கண்களைவிட வேறு சாட்சிகள் இருக்க முடியுமா?அப்படி உன்னால் அவர்கள் குற்றம் அற்றவர்கள் என்று நிரூபிக்க இயலுமானால் ,  தாராளமாக நிரூபிக்கலாம். நானும் மன்னிக்கிறேன். இல்லையானால் நாளைக் காலையில் இவர்களுக்கு தூக்கு நிச்சயம்" என்றான்

அரசியையும் வேலைக்காரனையும் அமைச்சர் தீர விசாரித்தார். அந்த அறையிலும் நன்றாக ஆராய்ந்தார். 

பிறகு அரசனிடம் அவர்கள் குற்றம் செய்யவில்லை என்று நிரூபித்தார். 

நண்பர்களே, அமைச்சர், அவர்கள் இருவரும் குற்றம் செய்யவில்லை என்று எப்படி அரசனுக்குத் தெளிவு படுத்தினார்?

புதிர் விடை :

கதையில் ஆரம்பத்தில் வேலைக்காரன் படுக்கையில் முல்லை பூக்களை தூவியிருக்கிறான் இல்லையா, வேலைக்காரன் ஒரு ஓரமும், அரசி அடுத்த ஓரத்திலும் படுத்திருக்கிறார்கள், ஆனால் நடுவில் இருக்கும் முல்லை மலர்கள் நசுக்காமல் அப்படியே இருப்பதை வைத்து, அமைச்சர் இருவரும் தவறு செய்யவில்லை என்பதை அரசருக்கு புரிய வைத்திருப்பார்.

ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் நடந்த சம்பவம், எனவே அவர்களை விடுதலை செய்ய சொல்லியிருப்பார்.

குறும்புக்கார வாலிபனும் , நீதிபதியும் , ஒரு குதிரையும் ! - புதிர் கதை

வெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது.

வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டதினாலும், பயணத்தில் களைப்பு அடைந்திருந்ததினாலும், அவன் அந்தச் சத்திரத்தில் தங்கி ஓய்வெடுத்து, மறுநாள் பயணத்தைத் தொடரலாம் என்று முடிவு செய்தான்.அதனால் குதிரையை விட்டிறங்கி, சத்திரத்தின் அருகில் இருந்த ஒரு மரத்தில் குதிரையைக் கட்டினான்.பிறகு அது உண்ணுவதற்காக புல் போட்டுவிட்டு சத்திரத்துக்குள் நுழைந்தான்.


அப்போது அங்கிருந்து குறும்புக்கார வாலிபன் ஒருவன், குதிரையின் வாலைப் பிடித்து இழுத்து விளையாட ஆரம்பித்தான்.சத்திரஹ்துக்குள் நுழைந்தவன் இதைப் பார்த்ததும், திரும்பிவந்து, "தம்பி, இது முரட்டுக் குதிரை.வலைப்பிடித்து இழுத்தால் அது கோபம் கொண்டு உதைக்கும். அது உதைத்தால் உனது பற்கள் எல்லாம் உடைந்துபோகும். அதனால் குதிரையுடன் விளையாடாதே" என்று எச்சரித்து விட்டுப் போய்விட்டான்.

ஆனால் அந்தக் குறும்பனோ அவன் கூறியதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. தனது விளையாட்டை மீண்டும் தொடர்ந்தான்.வாலைப் பிடித்து இழுத்ததினால் கோபம் கொண்ட குதிரை, ஓங்கி ஒரு உதை கொடுத்தது. அது சரியாக அவனது முகத்தில் பட்டு, நான்கு குட்டிக் கரணங்கள் போட்டு விழுந்தான். அவனது முன்பற்கள் எல்லாம் சிதரியது. முகத்திலும் காயம் ஏற்பட்டு வலி பொறுக்க முடியாமல் கூக்குரலிட்டான்.

"இந்த அநியாயத்தைக் கேட்பார் யாரும் இல்லையா?" என்று கூச்சலிட்டதைக் கேட்டு அங்கே கூட்டம் கூடிவிட்டது. ஊர்க்
காவலர்களும் வந்தார்கள்.என்ன நடந்தது என்று கேட்டதற்கு, " நான் ஒன்றுமே செய்யவில்லை. இந்தக் குதிரையின் பக்கமாக நடந்து கொண்டிருந்தேன். அப்போது இந்த முரட்டுக் குதிரை என்னை உதைத்துவிட்டது. எனது பற்களும் உடைந்து விட்டது. இப்படிப்பட்ட முரட்டுக் குதிரையை அனைவரும் நடக்கும் இடத்தில் கட்டி வைத்தது குதிரைக் காரனின் குற்றம். அதனால் அவன் எனக்கு நட்ட ஈடு கொடுக்கவேண்டும். அல்லது அவனுக்கு தண்டனை கொடுக்கவேண்டும்" என்று புலம்பினான்.

கவலர்கள் அவனை அந்த ஊர் நீதி மன்றத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அவனும் நீதிபதியிடம் தனது வழக்கைக் கூறினான்.
நீதிபதி குதிரைக்காரனை வரவழைத்தார்.அவனைப் பார்த்து, " ஐயா...இந்தக் குதிரை உன்னுடையதுதானா?" என்று தனது முதல் கேள்வியைக் கேட்டார்.குதிரைக்காரன் ஒன்றுமே பதில் பேசாமல் அமைதியாக நின்றான்.

மீண்டும் அவனிடம்" உன் குதிரையால்தான் இவனுக்கு இவ்வளவு காயமும், பற்களும் உடைந்துள்ளது. இதற்கு நீ என்ன கூறுகிறாய்" என்று நீதிபதி கேட்டார்.அப்போதும் அவன் பதில் பேசவில்லை.

அதைக் கண்ட நீதிபதி, " இவன் செவிட்டு ஊமை போல் தெரிகிறது.என்ன கேட்டாலும் அவனுக்குப் புரியவில்லை. அதனால் எப்படி வழக்கைத் தொடர்ந்து நடத்துவது" என்று கூறினார். 

உடனே அந்தக் குறும்பன் நீதிபதியைப் பார்த்து சில விஷயங்களைக் கூறினான்.
அவன் கூறியதைக் கேட்ட நீதிபதி, கொஞ்சம் ஆலோசித்துவிட்டு, தவறு உன்னுடையதுதான். அதனால் அவர் நட்ட ஈடு எதுவும் தரவேண்டியதில்லை என்று வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

மன்ற நண்பர்களே........அந்த குறும்புக்கார வாலிபன் என்ன கூறியதற்கு நீதிபதி இப்படித் தீர்ப்பு கூறினார்? 

புதிர் விடை : 

குதிரைக்காரன் ஊமை என்று எல்லோரும் சொல்லக் கேட்ட அவசரக்கார குறும்பன் "நீதிபதி அய்யா, அவன் ஒன்றும் ஊமை இல்லை, என்னிடம் குதிரை வாலை இழுத்தால் உதைக்கும் என்றான், ஆகையால் அவன் ஒன்றும் ஊமை இல்லை" என்றோ அல்லது "அவன் குதிரையை மரத்தில் கட்டியதும் என்னிடம் பேசினான்" என்றோ உளறி இருப்பான்.

படுத்தால் எழாதவள் , உட்கார்ந்தால் எழுந்திருக்காதவன் ! - புதிர் கதை

ஒரு முதியவர் ஒருவர் அந்த ஊருக்கு வந்தார். அங்கிருந்த பெரியவர்களைப் பார்ஹ்து, " ஐயா....நான் எனது மகனுக்குப் பொருத்தமான பெண்ணைத் தேடி இந்த ஊருக்கு வந்துள்ளேன்" என்றார். 

அங்கிருந்த பெரியவர்களும், " ஐயா...கண்டிப்பாக உமக்கு ஒரு நல்ல மறுமகள் இந்த ஊரில் கிடைப்பாள்.முதலில் உங்கள் மகனைப் பற்றிக் கூறுங்கள்" என்றார்கள்.


"என் மகன் மிகவும் அழகாக இருப்பான்.எந்தவிதக் கெட்ட பழக்கமும் கிடையாது..... ஆனால் உட்கார்ந்தால் எழுந்திருக்க மாட்டான்" என்றார் முதியவர்.
முதியவர் கூறியதைக் கேட்டதும் முகம் சுளித்தார்கள் அங்கிருந்தவர்கள்." கொஞ்சம் கூட மரியாதை தெரியாதவனாக இருப்பான் போலிருக்கிறதே!திமிர் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. அதினால்தான் உமது மகனுக்கு உங்கள் ஊரில் பெண் கிடைக்காமல் இங்கே வந்திருக்கிறீர்கள். முதலில் இடத்தைக் காலி செய்யுங்கள். இந்த ஊரில் உம் மகனுக்கு யாருமே பெண் கொடுக்க மாட்டார்கள்" என்றார்கள் அனைவரும்.

முதியவர் வருத்தத்துடன் அங்கிருந்து அடுத்த ஊருக்குப் போனார். அங்கேயும் அதே நிலைமைதான். பிறகு அங்கிருந்து ஊர் ஊராக அலைந்துவிட்டு, மங்களாபுரத்துக்கு வந்து சேர்ந்தார்.

மங்களாபுரத்திலும் தனது மகனைப் பற்றிக் கூறி அவனுக்குப் பொருத்தமான பெண் கிடைப்பாளா? என்று விசாரித்தார்.

முதியவர் சொன்னதைக் கூர்ந்து கேட்டார் ஒரு பெரியவர். பிறகு புண் முறுவலுடன் முதியவரை அழைத்து, " ஐயா....உமக்கு எனது மகளைப் பற்றிக் கூறுகிறேன். உங்களுக்குப் பிடிஹ்திருந்தாள், உமது மகனுக்கு மணம் செய்து வைக்கலாம்" என்றார்.
சொல்லுங்கள் என்றார் முதியவர்.

" எனது மகள் மிகுந்த அழகுடன் இருப்பாள். அவளிடம் எந்தக் குறையும் கூற முடியாது. ................ஆனால் படுத்துவிட்டாள் எழுந்திருக்க மாட்டாள்"என்றார்.

பெரியவர் கூறியதைக் கேட்ட முதியவர், " ஐயா.....இப்படிப்பட்ட பெண்ணைத்தானே நான் இதுவரை தேடிக்கொண்டிருந்தேன்.கடவுள் அருளால் நான் தேடிய பெண்ணே கிடைத்துவிட்டாள்.உடனே திருமணத்தை முடித்துவைப்போம்" என்றார்.

ஒரு நல்ல நாளில், படுத்தால் எழாத பெண்ணுக்கும், உட்கார்ந்தால் எழுந்திருக்காத இளைஞனுக்கும் மணம் நடந்தது.அவர்கள் இருவருமே சிறப்பாக அனைவரும் போற்றும் வண்ணம் இல்லறம் நடத்தினார்கள்.

மன்ற நண்பர்களே...வாருங்கள்..... 
எதனால் அந்தப் பெண்ணை படுத்தால் எழாதவள் என்றும், 
அந்த இளைஞனை உட்கார்ந்தால் எழுந்திருக்காதவன் என்றும் கூறினார்கள்.??

புதிர் விடை :

படுத்தால் எழுந்திருக்காத பெண் என்றால் அதற்கு அவள் சோம்பேறிப் பெண் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. ஒரு பெண் பொழுது போனதும், சோம்பலாகப் படுக்கையில் படுத்திருந்தால், கணவன் வெளியில் இருந்து வந்ததும், ஒருமுறை எழுந்து உணவு பறிமாற வேண்டும்.இதேபோல், மாமனார், மைத்துனர் இப்படி வீட்டு ஆட்கள் யார் வந்தாலும் எழுந்திருக்க வேண்டும்.. அனைவக்கும் உணவு பறிமாறிப் பின் வீட்டு வேலைகளை முடித்துவிட்டுப் படுத்தால் அவள் மறுபடியும் எழுந்திருக்கத் தேவை இல்லை. இப்படிப்பட்ட குடும்பப் பொறுப்பான பெண் என்ற பொருளில் தான் 'படுத்தால் எழுந்திருக்காத பெண்' என்றார் பெரியவர்.

ஒரு மகன் தரையில் தாழ அமர்ந்திருந்தால், தந்தை மற்றும் பெரியவர்கள் வரும்போது எழுந்து மரியாதை தரத் தேவையில்லை.. அதே சமயம் நாற்காலியில் அமர்ந்திருந்தால், ஒவ்வொருவர் வரும்போதும் எழுந்திருக்கவேண்டும். அதனால் மிகவும் மரியாதை தெரிந்த மகன் என்ற பொருளில் முதியவர் ' உட்கார்ந்தால் எழுந்திருக்காத மகன் ' என்றார்.

ஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் ! - புதிர் கதை

முன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார்.

ஒரு நாளிரவு, அல் ரஷீதும், ஜாபரும் மதுவைக் குடித்து, மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.  இருவருக்குமே போதை ஏறிக்கொண்டிருந்தது.

அப்போது அல் ரஷீத், " ஜாபர் ...நீ அழகான அடிமைப் பெண் ஒருத்தியை விலைக்கு வாங்கியிருக்கிறாயேமே!!!...எனக்கு அவளை விற்றுவிடு.நீ என்ன விலை கேட்டாலும் கொடுக்கிறேன்" என்றார்.


அதற்கு ஜாபர் தனக்கு என்ன விலை கொடுத்தாலும் அந்த அடிமைப் பெண்ணை யாருக்கும் விற்பதாக இல்லை என்றார்.
அப்படியானால் எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிடு என்றார் அரசர்.
அன்பளிப்பாகவும் கொடுக்கமுடியாது என்றார் ஜாபர்.

மதுவின் போதையில் இருந்த அரசருக்கு கடுமையான கோபம் உண்டானது."ஜாபர்.....நீ எனக்கு அடிமைப் பெண்ணை விலைக்கோ அல்லது அன்பளிப்பாகவோ தந்தே ஆகவேண்டும். அப்படி அவள் எனக்கு கிடைக்காதுபோனால், பட்டத்து அரசி சுபேதாவை நான் தலாக் செய்துவிடுவேன் [விவாக ரத்து] இது உறுதி" என்று கூச்சல் போட்டார்.

போதை தலைக்கேறியிருந்த ஜாபரும், " நான் அவளை உங்களுக்கு விற்கவோ அல்லது அன்பளிப்பாகவோ தரமாட்டேன். அப்படித் தந்துவிடுவேனேயானால், எனது மூன்று குழந்தைகளுடன் என் மனைவியை தலாக் [ விவாகரத்து] செய்துவிடுவேன். இதுவும் உறுதி" என்றார்.

கொஞ்ச நேரம் கழித்து இருவருக்குமே போதை தெளிந்தது. குடிபோதையில் இருவரும் பேசியவை நினைவுக்கு வந்தது. என்ன செய்தாலும் இருவரில் யாராவது ஒருவர் விவாகரத்து செய்தே ஆகவேண்டுமே.......வாழ்க்கை பாழாகிவிடுமே....என்ன செய்வது என்று இருவருமே வருந்தினார்கள்.

எந்த சிக்கலான பிரச்சினயானாலும் அதற்குத் தகுந்த தீர்வு கூறும் காஜி யூசுப்பை அழைத்துவரும்படி காவலர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அந்த இரவு வேளையிலே காவலர்கள் சென்று காஜியை அழைத்துவந்தார்கள்.

நடந்த விஷயத்தை அவரிடம் கூறி இதற்கு சிக்கல் இல்லாமல் தீர்வு எப்படிக் கான்பது என்று கேட்டார்கள்.
அவர்கள் கூறியது முழுவதையும் கேட்ட காஜி சிரித்தபடியே, " இதில் எந்த சிக்கலுமே இல்லையே.சுலபமாக தீர்வு கானலாமே!!!" என்றார்.

அவர் கூறியபடியே நடந்து இருவருக்குமே எந்த சிக்கலும் இல்லாமல் பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டார்கள்.

நண்பர்களே காஜி யூசூப் இந்தச் சிக்கலுக்கு என்ன தீர்வு கூறியிருப்பார்.?


 புதிர் விடை :

அவர்களது பிரச்சினையைக் கேட்ட யூசுப் அலி " இதிலே சிக்கல் எதுவுமே இல்லையே.  மிகச் சுலபமாக இதற்குத் தீர்வு கானலாம் " என்றார்.

" இந்த அடிமைப் பெண்ணை அமைச்சர் உங்களுக்கு பாதி விலைக்கும், பாதி அன்பளிப்பாகவும் தரவேண்டும். அதனால் அமைச்சர் விற்றதாகவும் ஆகாது. அன்பளிப்பாகக் கொடுத்ததாகவும் ஆகாது. ஆக இதனால் நீங்கள் இருவருமே கூறியது போலவே நடந்துள்ளது. அதனால் இருவரது சபதங்களுமே காப்பாற்றப் படும்" என்றார். யூசுப்பின் தீர்வைக் கேட்ட இருவருமே மகிழ்ந்தார்கள். 

அமைச்சர் உடனே அந்தப் பென்னை வர வழைத்து, அரசனுக்குப் பாதி விலையாகவும் பாதி அன்பளிப்பாகவும் கொடுத்தார்.

Wednesday, December 18, 2013

சீனாவில் பிரபலமாகி வரும் கரப்பான்பூச்சி பண்ணை

சீனாவில் பிரபலமாகி வரும் கரப்பான்பூச்சி பண்ணை


சீனாவில், கரப்பான் பூச்சி பண்ணை பிரபலமாகி வருகிறது.

கரப்பான் பூச்சி என்றாலே, முகத்தைச் சுளிப்பவர்கள் மத்தியில், சீனாவில் சிலர், கரப்பான்பூச்சி பண்ணை வைத்து, கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கின்றனர்.

அறுசுவை உணவு: சீனாவில், கரப்பான்பூச்சி, வெட்டுக்கிளி, சிலவகை கூட்டுப் புழுக்களை வறுத்துச் சாப்பிடுவது, அறுசுவை உணவாகக் கருதப்படுகிறது. கரப்பான் பூச்சிகளை உலர வைத்து, சீன மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் பலவற்றிலும், பயன்படுத்துகின்றனர்.இதிலுள்ள புரதச்சத்து, மற்ற வகை புரதச்சத்தைவிட, விலை மிகவும் குறைவு. மேலும், இவற்றின் இறக்கையில் உள்ள செலுலோஸ் என்ற பொருளையும் பயன்படுத்தலாம்.


கரப்பான் பூச்சிகளுக்கு, இருட்டான இடங்கள் பிடிக்கும். பழைய கோழி பண்ணைகள், இருட்டான கட்டடங்களில் முட்டை வைக்கும் தட்டுக்கள், இரும்பு தகடுகளுக்கு நடுவே இவற்றை வளர்க்கின்றனர். சீனாவில் மட்டும், நூற்றுக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சி பண்ணைகள் உள்ளன.

"வாங்க் பூமிங்’ என்ற கரப்பான் பூச்சி பண்ணை உரிமையாளர் மட்டும், தன்னுடைய ஆறு பண்ணைகளில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகயை வளர்க்கிறார். அவர், 2010 ஆம் ஆண்டு பண்ணையை ஆரம்பித்தார்.

இந்த மூன்று ஆண்டுகளில், உலர்ந்த கரப்பான் பூச்சியின் விலை 10 மடங்காக உயர்ந்து உள்ளது என்கிறார். அரை கிலோ உலர்ந்த கரப்பான் பூச்சியின் விலை 120 ரூபாயிலிருந்து, 1200 ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதற்கு முதலீடும் மிகக் குறைவு. 61 ரூபாய் முதலீடு செய்தால், 670 ரூபாய் லாபம் பார்க்கலாம். 

பெரிய அளவுலாபம்: பண்ணை ஆரம்பிக்க, கரப்பான் பூச்சி முட்டைகள் இருந்தால் போதும். அதுவும், அமெரிக்க இன கரப்பான் பூச்சிகளைத்தான் வளர்க்கின்றனர். இவை நீளமாக, பெரிதாகக் கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு இறக்கைகள் உண்டு.


இவற்றைக் கொல்லுவதும் எளிது என்கிறார் பூமிங். அப்படியே அள்ளி அல்லது வாக்யூம் செய்து, கொதிக்கும் நீரில் போட்டு, வடகம் போல் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கரப்பான் பூச்சி பண்ணøயில், பெரிய அளவு லாபம் பார்க்கலாம் என்பதே சீனாவில் பலருக்கும் தெரியாமல் இருந்தது.

ஒருமுறை கோடிக்கணக்கான கரப்பான்கள், ஒரு பண்ணையில் இருந்து எஸ்கேப் ஆகிய பின்பு தான் மக்களுக்கே தெரிய வந்தது. இந்தப் பண்ணைகளை ரகசியமாக, மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து, தொலைவில் வைக்கின்றனர்.

இப்போது சீன டி.வி.களில், கரப்பான பண்ணை வளர்ப்பு முறை பற்றி விளம்பரங்கள் பிரபலமாக உள்ளன.

பூச்சிகளும், புரதச்சத்தும்: பசி, வறுமையை எளிதாக ஒழிக்க ஐ.நா சபை பல ஆண்டுகளாகவே பூச்சிகளை உணவாக உண்ண ஊக்கமளித்து வருகிறது.
பூச்சிளில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இவற்றை வளர்ப்பது சுலபம். பன்றி, கோழி, ஆட்டுப் பண்ணைகள் போன்று, சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாது. மேலும், விலங்கினங்களின் கழிவுகளில் உண்டாகும். மீத்தேன் வாயு, பூமியை வெப்பமாக்குகிறது. தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவிலுள்ள 200 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், கம்பளிப்புழு, வண்டு, தேள், வெட்டுக்கிளி, குளவி போன்ற பூச்சி, புழுக்களை விரும்பி உண்கின்றனர்.


பலன்கள்: சீனா மற்றும் தென்கொரியா பல்கலைக் கழகங்கள் கரப்பான்பூச்சியை வைத்துப் பலவித ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். அணு கதிர்வீச்சைக் கூட, தாங்கும் சக்தி உடையது கரப்பான்பூச்சி. இவை மூலம் – எய்ட்ஸ், கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

"லீ ஷீவான்’ என்ற 78 வயது சீன வைத்தியர், கரப்பான் பூச்சிகளை அரைத்து, தன் வழுக்கைத் தலையில் தினமும் தேய்த்துக் கொண்டதால், முடி வளர்ந்ததாகக் கூறுகிறார். மேலும், முகம் பளபளப்பாக இவற்றை அரைத்து முகத்தில் கூட பூசலாம் என்கிறார்.

இந்திய பெண்களுக்காக கூகிள் அமைத்துள்ள இணையதளம்.


இந்திய பெண்களுக்காக கூகிள் அமைத்துள்ள இணையதளம்.


இந்திய பெண்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் இணையத்தை பயன்படுத்த வைப்பதற்காக கூகிள் இந்தியா தனி இணையதளத்தை அமைத்துள்ளது. இந்த இணையதளம் மூலமாக , பெண்கள் மத்தியில் இணைய பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அடுத்த ஆண்டுக்குள் 5 இணையத்தை பயன்படுத்தும் இந்திய பெண்கள் எண்ணிக்கையை 5 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.


மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பது போல இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியாஇரண்டாவது இடத்திற்கு வர உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் படி இந்தியாவில் இணையத்தை பயன்படுத்திபவர்களின் எண்ணிக்கை 205 மில்லியனாக இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜூனில் இந்த எண்ணிக்கை 243 மில்லியனை தொட்டுவிடும் என்று இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்க ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம் இந்தியா அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்தை பிடிக்கும். தற்போது சீனா 300 மில்லியன் பயனாளிகளோடு முதல் இடத்திலும் 207 மில்லியன் பயனாளிகளோடு இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்தியாவில் இணைய பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் இணையத்தை பயன்படுத்தும் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இணைய பயனாளிகளில் மூன்றில் ஒருவரே பெண்களாக இருக்கின்றனர்.

இந்த நிலையை , கூகிள் இந்தியா இந்தியாவில் மேலும் அதிக எண்ணிக்கையில் பெண்கள் இனையத்தை பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு இணையதளத்தை அமைத்துள்ளது. இண்டெல், ஹிந்துஸ்தான் லீவர் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து கூகிள் இந்த இணையதளத்தை அமைத்துள்ளது.

http://hwgo.com/index.html ( ஹெல்பிங் வுமன் கெடான்லைன் ) எனும் முகவரியில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் இணைய பயன்பாட்டின் அடிப்படை பற்றி பெண்களுக்கு வழி காட்டுகிறது. இணையத்தை எளிதாக அறிமுகம் செய்யும் வகையில் இணையத்தை பய்னப்டுத்த தேவையான அடிப்படையான விஷயங்களை முகப்பு பக்கத்திலேயே கொடுத்துள்ளது. கம்ப்யூட்டர் அடிப்படையில் துவங்கி, இணைய அடிப்படை, இமெயில், வீடியோ சேவை ஆகியவற்றை எளிமையாக இந்த பகுதி விளக்குகிறது. இனையத்தில் பெண்களுக்கு பயன்படக்கூடிய விஷயங்களையும் வீடியோ விளக்கத்துடன் அளித்துள்ளது.

இணையத்தை பெண்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என வழிகாட்டும் இந்த தளத்தில் இணையத்தை பயன்படுத்தி பயன்பெற்ற பெண்களின் அனுபவமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இணைய பயன்பாடு என்பது சகஜமாக கருதப்பட்டாலும் கூட இதுவரை இணையத்தை பயன்படுத்தியிராத பெண்களை இணையம் அருகே கொண்டு வரும் முயற்சியாக இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளம் மூலம் இணைய்த்தை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கையை 50 மில்லியனாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

கூகுளின் சமூக நோக்கிலான முயற்சிகளில் இதுவும் ஒன்று. தற்போது ஆங்கிலத்திலும் இந்தியிலும் உள்ளது. தமிழ் உள்ளிட்ட மற்ற இந்திய மொழிகளிலும் அமைந்தால் நன்றாக இருக்கும்.


இணையதள முகவரி: http://hwgo.com/index.html

பிட்காயினை வீசி எரிந்து கோடிகளை இழந்த மனிதர் !

பிட்காயினை வீசி எரிந்து கோடிகளை இழந்த மனிதர்.


இணைய நாணயமான பிட்காயினின் மதிப்பு அதிகரித்து  வரும் நிலையில் பிட்காயின் லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் உருவாகி வருகின்றனர். இந்த பிட்காயின் அதிர்ஷ்டசாலிகள் மத்தியில் பிட்காயினை நினைத்து ஐ.டி துறை பணியாளர் ஒருவர் புலம்பிக்கொண்டிருக்கிறார். பிரிட்டனை சேர்ந்த  ஜேம்ஸ் ஹோவல்ஸ் எனும் அவரது கதையை கேட்டால் நமக்கும் பரிதாபமாக தான் இருக்கும்.


இணைய நாணயம், என்ம நாணயம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் பிட்காயின் பற்றி சமீப காலமாக தான் இணைய உலகில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன் பிட்காயின் பற்றி கேள்விபட்ட போதே ஹோல்ஸ் , இது தான் எதிர்கால நாணயமாக இருக்கப்போகிறது என உணர்ந்திருந்தார். ஆகவே ஆர்வத்தோடு பிட்காயினை தோண்டி எடுப்பதற்கான செயலிலும் ஈடுபட்டிருந்தார். தோண்டி எடுப்பது என்றால் குழம்ப வேண்டாம். டிஜிட்டல் உலகில் அர்த்தமுள்ள தகவல்களை தேடி எடுப்பதை மைனிங் என்று குறுப்பிடுகின்றனர். எந்த ஒரு மைய அமைப்பாலும் வெளியிடப்படாத பிட்காயினையும் அதன் வலைப்பின்னலில் இப்படி தான் தோண்டி எடுக்க வேண்டும். 2009 ல் ஹோவல்ஸ் தனது லேப்டாப் மூலம் பிட்காயினை தோண்டி எடுத்துக்கொண்டிருந்தார். சுமார் ஒரு வார கால் தேடலில் அவருக்கு 7,500 பிட்காயின்கள் கிடைத்தன. இது பெரிய அதிர்ஷ்டம் தான். இப்போது பிட்காயினை தோண்டி எடுக்க லேப்டாப் எல்லாம் போதாது. ஏனெனில் பிட்காய்னை தோண்டி எடுப்பது என்றால் கணிதவியல் சமன்பாடு போன்ற புதிர்களுக்கு விடை காண வேண்டும். பிட்காயின் சித்தாந்தப்படி ,இந்த புதிர்கள் சிக்கலாகி கொண்டே வரும். தற்போது பிட்காயின் வலைப்பின்னலின் புதிர்களை விடுவிக்க லேப்டாப்பைவிட பன்மடங்கு சக்திவாய்ந்த கம்ப்யூட்டர்கள் தேவை. இதற்காக என்றே பிரத்யேக் கம்ப்யூட்டர்கள் எல்லாம் இருக்கின்றன. பலர் ஒன்று கூடி கம்ப்யுட்டர் வலைப்பின்னல் அமைத்தும் பிட்காயின் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், 4 ஆண்டுகளுக்கு முன்னரே ஹோவல்ஸ் 7,500 பிட்காயின்களை சேகரித்து வைத்து விட்டார். பிட்காயின்களுக்கு பெளதீக வடிவம் கிடையாது. அவற்றை குறீயிடுகளாக இணைய பர்சில் போட்டு வைக்கலாம். ஹோவல்ஸ் தனது பிட்காயின்களை லேப்டாப் ஹார்ட்டிரைவில் வைத்திருந்தார். அவரது போதாத நேரம் லேப்டாப் பழுதாகி அதை தனியே மேஜையில் வைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன் வீட்டை சுத்தமாக்கிய பொது அதை தெரியாமல் தூக்கி வீசி எரிந்து விட்டார் . அதை மறந்தும் விட்டார்.

ஆனால் இடைப்பட்ட காலத்தில் பிட்காயின் ஏற்ற இறக்கங்களுக்கு இலக்கானாலும் சமீபத்தில் அதன் மதிப்பு எகிறத்துவங்கியுள்ளது. கடந்த ஏப்ரலில் ஒரு பிட்காயினின் மதிப்பு 100 டாலரை தொட்டது. இதோ சில தினங்களுக்கு முன் ஒரு பிட்காயின் ஆயிரம் டாலர் எனும் உச்சத்தை தொட்டுள்ளது.

இத்தனைக்கும் நிஜ உலகில் பிட்காயின் பரிவர்த்தனையில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. சட்டபூர்வ கேள்விகளும் உள்ளன. பிட்காயினை கொண்டு சில பொருட்களை மட்டுமே வாங்க முடியும். ஆனாலும் அதன் மதிப்பு ஏறுமுகத்தில் இருக்கிறது. இதனால் கைவசம் பிட்காயினை வைத்திருப்பவர்கள் எல்லாம் லட்சாதிபதிகளாகி கொண்டிருக்கின்றனர்.

இனி ஹோவ்ல்ஸ் கதைக்கு வருவோம். பிட்காயினை மறந்திருந்தவர் சமீபத்திய பரபரப்பால ஈர்க்கப்பட்டு தனது ஹார்ட்டிரைவை தேடிப்பார்த்த போது தான் அதை குப்பை என தூக்கி வீசியது தெரிந்து திடுக்கிட்டு போனார். பிட்காயின் பரிவர்த்தனை மதிப்பு படி அவரிடம் இருந்த 7,500 பிட்காயின்களின் மதிப்பு 75, 00000 டாலர்கள். நம்மூர் கணக்கிற்கு மாற்றினால் கிட்டத்தட்ட 46 கோடி வரும்.

ஹோவ்லஸ் உடனே தனது பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும் இடத்திற்கு சென்று விசாரித்திருக்கிறார். வேல்ஸ் மாகானத்தின் நியூபோர்ட் பகுதியில் உள்ள குப்பை கொட்டும் இடத்தின் அதிகாரிகள் , அவரிடம் கால்பந்து மைதானம் அளவுக்கு இருந்த குப்பை மலையை காட்டி அதன் அடியில் தான் ஹார்ட்டிரைவ் இருக்க வேண்டும் என கூறினர். அதை கேட்டதுமே ஹோவல்சுக்கு நம்பிக்கை போய்விட்டது. தன்னால் அதை தேட முடியாது என விட்டுவிட்டவர் வேறு யாரேனும் அரும்பாடு பட்டு தேடி எடுத்தால் தனக்கும் ஒரு பங்கு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரிட்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் இதழில் இது பற்றி தனது சோக கதையை ஹோவல்ஸ் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் பிட்காயின் மதிப்பை உணர்த்துவதோடு இன்னொரு பாடத்தையும் சொல்லாமல் சொல்கிறது. கம்ப்யூட்டரில் எதை சேகரித்து வைத்தாலும் அதற்கு பேக் அப் எடுத்து வைக்க வேண்டும் என்பது தான். ஹோவல்ஸ் பேக் அப் எடுத்து வைத்திருந்தால் அவர் சேகரித்திருந்த பிட்காயினை இயக்குவதற்கான இணைய சாவி அவரிடமே இருந்திருக்கும். 

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்