Saturday, June 8, 2013

அற்புத மணல் மாதா கோவில் - செட்டிவிளை

அற்புத மணல் மாதா கோவில் - செட்டிவிளை

சிவப்பு பட்டுக் கம்பளம் விரித்தாற்போல் நிரவியுள்ள சிவப்பு மணல் பகுதி. அங்குமிங்கும் சில ஆலமரங்கள், அத்திமரங்கள். மணல் பகுதியை அடுத்து முந்திரிப் பழத்தோட்டங்கள்; வழியெங்கும் ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்களின் அழகுத் தோற்றம். முட்புதர்களுக்கும் காட்டுச் செடிகளுக்கும் குறையில்லாத மணற்பரப்பு. இதுதான் மணல் மாதா கோயிலின் இயற்கைப் பின்னணி.


தூத்துக்குடி  மாவட்டதில் உள்ள  திருச்செந்தூரிலிருந்து கடலோரமாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பெரியதாழை அல்லது தோப்புவிளையிலிருந்து உட்புறமாகப் பிரிந்து செல்லும் சிறிய சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ளது, மணல் மாதா திருத்தலம். இதன் அருகே உள்ள ஊர் செட்டிவிளை. முன்னொரு காலத்தில் இந்த மணல் மாதாவின் திருத்தலம் அமைந்திருந்த ஊர், ‘கணக்கன் குடியிருப்புஎன்று அழைக்கப்பட்டது.


1597ம் ஆண்டில் திருவாங்கூர் மகாராஜாவின் பாளையக்காரனாக விஜயாபதியில் கோட்டை கட்டி வாழ்ந்த ஆரியப் பெருமாள் என்பவன் பெரியதாழை வரையுள்ள கடலோரக் கிராமங்களுக்குள் நுழைந்து மக்களிடம் அநியாய வரி கேட்டுத் துன்புறுத்தி, வீடுகளுக்கு நெருப்பு வைத்து ஆலயங்களையும் இடித்துத் தரை மட்டமாக்கிவிட்டுச் சென்றான். ஆரியப்பெருமாள் உவரி ஊரைச் சேர்ந்த பெண்களையும் கைது செய்து விஜயாபதி கோட்டையில் சிறை வைத்தான். 1600ம் ஆண்டில் மணப்பாடு ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் இரவோடு இரவாக  விஜயாபதி கோட்டைக்குள் நுழைந்து ஆரியப் பெருமாளின் தலையை வெட்டி வீழ்த்தி, உவரிப் பெண்களை மீட்டனர்.




இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு 1600ம் ஆண்டில், இயேசு சபைக் குருக்கள் ஆரியப் பெருமாள் அழித்துப் போட்ட ஆலயங்களையெல்லாம் மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொண்டனர். கொச்சி மாநில இயேசு சபை அதிபர் நூனோ ரொட்ரீகஸ், பெரியதாழை, உவரி போன்ற ஊர்களின் சுற்று வட்டாரத்தில் உள்நாட்டு கிராமங்களில் வாழ்ந்து வந்த இந்து நாடார் குல மக்களை அழைத்துப் பொதுக்கூட்டம் கூட்டி, கிறிஸ்தவ ஆலயங்களை புனர் நிர்மாணம் செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

 இவருடைய வேண்டுகோளை மக்கள் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு தங்களால் இயன்ற பொருளுதவியை வழங்கினர். மேலும் சில ஊர்களில் ஆலயக் கட்டுமானப் பணிகளில் இவர்களே கல்லும் மண்ணும் சுமந்து உதவினர். பெரிய தாழையிலிருந்த புனித அருளப்பர் ஆலயத்தை உருவாக்க இந்து மக்கள் 300 தங்க நாணயங்கள் தந்தனர். நாளாவட்டத்தில் மணல் மாதா ஆலயமும் உருவாகியது.

கத்தோலிக்க மதத்திற்கு எதிரிகளான டச்சுக்காரர்கள் ஹாலந்து நாட்டிலிருந்து 1685ம் ஆண்டு முத்துக்குளித்துறை பகுதிக்கு வந்து அதிகாரம் செலுத்த ஆரம்பித்தனர். அவர்கள் கால்வினிய பதிதக் கொள்கைகளைப் பின்பற்றியவர்கள். சுரூப வணக்கத்தையும் நற்கருணையையும் மாதா பக்தியையும் வன்மையாகக் கண்டனம் செய்தனர். புன்னைக்காயல், வைப்பார், தூத்துக்குடி, மணப்பாடு போன்ற ஊர்களில் உள்ள மாதா கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கினர். கடலோரக் கிராமங்களில் பணியாற்றிய கத்தோலிக்க  குருக்களை விரட்டியடித்தனர்.



இதனால் கடலோரக் கத்தோலிக்க பங்கு ஆலயங்களும் உள்நாட்டு ஆலயங்களும் குருக்களின்றி கைவிடப்பட்டன. இதற்கிடையில் மணல் மாதா கோயில் மண்ணுக்குள் புதையுண்டு விட்டதால் டச்சுக்காரர்களின் மதவெறித் தாக்குதலிலிருந்து தப்பியது. உள்ளூர்களில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும் பல இடங்களுக்கு சிதறுண்டு போயினர். 1740ம் ஆண்டு முதல் டச்சுக்காரர்களின் ஆதிக்கம் முத்துக்குளித்துறையில் வீழ்ச்சியுறத் தொடங்கிற்று. அதனால் பாழடைந்து கிடந்த பழைய ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டன அல்லது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டன.

 ஏறக்குறைய இந்த காலத்தில்தான் மண் மூடிக்கிடந்த மணல் மாதா கோயிலும் தோண்டி எடுக்கப்பட்டது எனக் கருதலாம். காரணம் 1743ம் ஆண்டில் முத்துக்குளித்துறை இயேசு சபைக் குருக்கள் பெரியதாழையில் தங்கள் தலைமை இல்லத்தை அமைத்தனர். இயேசு சபை பிரெஞ்சுக் குருக்கள் அடிக்கடி பெரியதாழைக்கு வந்து போயினர். அப்படி வரும்போதெல்லாம் அவர்களில் பலர் மணல் மாதா கோயிலையும் தரிசித்துச் செல்வது வழக்கம். அப்படியானால் புதையுண்டு போயிருந்த மணல் மாதா கோயில் இவ்வாண்டிலேயே ஒரு திருத்தலமாக விளங்கியது என்பது உறுதி.

தருவை என்ற ஊரை அடுத்துள்ள மணல்மேடு பகுதியிலுள்ள காடுகளில் ஆடு மேய்க்கும் இடையர்களுக்கு ஆலமர நிழலில் தங்கி இளைப்பாறிச் செல்வது வழக்கம். ஒருமுறை இடையன் ஒருவன் பழைய கணக்கன் குடியிருப்பு மண்ணுக்குள் புதைந்த மணல் மேட்டில் ஆடுகளை ஓட்டிச் சென்றான். அவனது சொந்த ஊர் சொக்கன் குடியிருப்பு. அவன் ஆடுகளை ஓட்டிச் சென்றபோது அவனது காலில் புதையுண்ட மாதா சிற்றலயத்தின் முகப்பு சிகரத்திலிருந்த சிலுவை அவனது காலில் தட்டுப்பட்டது. அது என்னவென்று அறிய மணலைச் சிறிது தோண்டியபோது முழுச் சிலுவையும், அதன் கீழேயிருந்த கூரை ஓடுகளும் தென்பட்டன. உடனே அவன் ஓடோடிச் சென்று சொக்கன் குடியிருப்பு மக்களிடம் விவரம் சொன்னான். மக்கள் திரளாக விரைந்து வந்து இன்னும் ஆழமாக மணலைத் தோண்டினர். இவ்வகழ்வுப் பணியில் சுற்றுப்புற ஊர்களைச் சேர்ந்த மக்களும் ஒத்துழைத்தனர்.

சில வாரங்களுக்குள் மண்ணுக்குள்ளிருந்த கோயில் முழுவதும் வெளிப்பட்டது என மக்கள் வழி வழியாய் பேசி வருகின்றனர். ஆனால் ஆலயம் வெளிப்பட்ட உண்மையான ஆண்டுக்கு இதுவரை வரலாற்று ஆதாரம் கிடைக்கவில்லை. அநேகமாக இந்த அகழ்வுப் பணி 1700-1750 ஆண்டுகளுக்குள் நிகழ்ந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

தோண்டி எடுக்கப்பட்ட ஆலயத்திற்குள் மக்கள் முதன்முதலாக நுழைந்தபோது பீடத்தின் நடுவிலிருந்த மாதா சுரூபத்தின் இருபக்கங்களிலும் இருமெழுகுவர்த்திகள் அதிசயமாக அணையாது எரிந்து கொண்டிருந்தன என்று மக்கள் பேசி வருகின்றனர். அங்கே நடுப்பீடத்தில், குழந்தை இயேசுவைக் கையில் ஏந்திய பாணியில் பரலோக மாதாவின் அழகிய சுரூபம் இருக்கக் கண்டனர். அன்றிலிருந்து அவளது ஆலயத்தை மக்கள், பரலோக மாதா ஆலயம் என அழைக்கலாயினர்.

 பரலோக அன்னையின் சுரூபத்தின் இருமருங்கிலும் இயேசு சபை இஞ்ஞாசியார், அந்தோணியார் ஆகிய இரு புனிதர்களின் சுரூபங்கள் உள்ளன. இதனால் இவ்வாலயத்தை முதன்முதலில் இயேசு சபைக் குருக்கள்தான் கட்டியெழுப்பினர் என்பதை ஊகிக்கலாம். ஆலயத்திலிருந்த பரலோக மாதாவின் புராதன சிறிய சுரூபம் ஒன்று தற்போது செட்டிவிளை ஆலயத்தில் இருப்பதாக ஒரு மரபுச் செய்தி உண்டு.



இந்த மணல் மாதா ஆலயம் ஆண்டு முழுவதும் மக்கள் தரிசித்துச் செல்லும் புகழ் பெற்ற ஒரு திருத்தலமாக விளங்குகிறது.



3 comments:

  1. தூத்துக்குடி மாவட்டம் திருசெந்தூர்

    ReplyDelete
    Replies
    1. தவறை சரி செய்து விட்டேன் :)

      Delete
    2. சகோதரரே ஆரியப் பெருமாள் திருவாங்கூர் பாளையக்காரர் என்று எதில் குறிப்பிடப்படுகிறது.

      Delete

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்