Wednesday, December 18, 2013

வியக்க வைக்கும் பிரமிட் !

வியக்க வைக்கும் பிரமிட் !


கட்டடக் கலை

எகிப்திய நாகரிகம் பல்வேறு துறைகளில் ஜொலித்தது என்றபோதும், அதன் உச்சகட்டத் தனித்துவம் கட்டடக் கலைதான். எகிப்து மக்களுக்குச் செங்கல் தயாரிப்பது கை வந்த கலையாக இருந்தது. நைல் நதியிலிருந்து கிடைத்த களிமண்ணோடு, வைக்கோல், தேவையான அளவு தண்ணீர் சேர்த்தார்கள். இந்தக் கலவையைக் கால்களால் மிதித்து, உதைத்து, கலவை தேவையான பதத்துக்கு வந்தவுடன் வார்ப்புகளில் வைத்து, தேவையான வடிவங்கள் ஆக்கினார்கள். இவை வெயிலில் காய வைக்கப்பட்டு செங்கற்கள் ஆயின.


அரண்மனைகள், மாளிகைகள், கோட்டைகள், வீடுகள் ஆகியவை கட்டச் செங்கற்களையும், கோவில்கள், கல்லறைகளுக்குக் கற்களையும் உபயோகப்படுத்துவது வழக்கம்.  கோவில்களிலும், வீடுகளிலும் சுவர்களில் ஓவியங்கள்  தீட்டப்பட்டன, சிற்பங்கள் அழகு கூட்டின.

வீடுகள்

வீடுகள் ஒன்று அல்லது இரண்டு மாடிக் கட்டங்களாக இருந்தன. வீடுகளில் கட்டில்கள்,  பெட்டிகள், மேசைகள் போன்ற மரச் சாமான்கள் இருந்தன. பல வீடுகளில், வரவேற்பு அறை, வசிக்கும் அறை, படுக்கை அறைகள், குளியல் அறைகள், உணவு பாதுகாக்கும் அறைகள் எனப் பல அறைகள் இருந்தன.

பணக்காரர்கள் வீடுகளில், இன்னும் அதிகம் வசதிகள், சொகுசுகள். பெரிய, பெரிய அறைகள். வீட்டுக்கு நடுவில் பூச்செடிகள் நிறைந்த பூங்கா, பல குளியல் அறைகள், உள் சுவர்களிலும், உட் கூரைகளிலும் அழகிய ஓவியங்கள், கட்டில்கள், மரப் பெட்டிகளிலும் ஓவியங்கள், வேலைப்பாடுகள், கலைநயமான மண் பாண்டங்கள், சலவைக் கல் ஜாடிகள், பாத்திரங்கள்.

அரண்மனைகள் தனி நகரங்கள்போல் வடிவமைக்கப்பட்டிருந்தன. அரண்மனைக்கு உள்ளேயே கோயில்கள் இருந்தன.

பிரமிட்கள்

எகிப்து என்றவுடன் நம் கண்களின் முன்னால் விரிபவை பிரமிட்கள். சாதாரண மக்களை மட்டுமல்ல, பொறியியல் வல்லுநர்களையும் வியக்க வைக்கும் அமைப்புகள்.  ஒரிஜினல் ஏழு உலக அதிசயங்களில், இன்று நாம் காணக் கிடைக்கும் ஒரே அதிசயம் பிரமிட்கள்தாம்.

பிரமிட் என்றால்  கூம்பு வடிவம். அடிப்பகுதி நீண்ட சதுரமாக இருக்கும். நான்கு சரிவான முக்கோணப் பகுதிகள் உச்சியில் ஒன்றாக இணையும். இந்தப் பிரமிட்களுக்குள் ராஜா ராணிகள், விஐபிகள் ஆகியோரின் உடல்கள் அவர்கள் மறைவுக்குப்பின் மம்மிகளாக, உடல் கெடாதவாறு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த உடல்கள் கெட்டுப் போகாமல் இருக்கின்றன. பிரமிட்களின் கூம்பு வடிவம் இதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

பிரமிட்கள் எல்லாமே ஏன் கூம்பு வடிவில் மட்டுமே கட்டப்பட்டுள்ளன? வீடுகளை சாதாரணமாக, சதுர, செவ்வக வடிவங்களில் கட்டியவர்கள், பிரமிட்களை மட்டும் கூம்பு வடிவம் ஆக்கியது ஏன்?


ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டுகள் செய்த பரிசோதனைகளின் அடிப்படையில் தரும் விளக்கங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

பிரமிட் வடிவ அறைக்குள் காய்கறிகள், பழங்களை வைத்தால், மற்ற அறைகளில் வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்களைவிட அதிக நாட்கள் கெடாமல் இருகின்றன.

பிரமிட் வடிவக் கட்டங்களில் தூங்குபவர்களுக்கு, சாதாரண அறைகளில்  தூங்குபவர்களைவிட, அதிகம் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் இறந்த ஒரு பூனையின் உடலை, மரத்தால் செய்த பிரமிட் வடிவப் பெட்டிக்குள் வைத்தார்கள். பல ஆண்டுகள் ஆன பின்னும் இந்த உடல் கெட்டுப் போகவில்லை.

பிரமிட் வடிவ அறைக்குள் இருக்கும் இரும்புப் பொருட்கள் எளிதாகத் துருப் பிடிப்பதில்லை.


இப்படி ஆச்சரியமான கண்டுபிடிப்புகள்!

கூம்பு வடிவ அமைப்பு, சுற்றுப்புறத்திலிருந்து ஒரு வித மின்காந்த ஆற்றலை உள் வாங்குகிறது. பிரமிடின் உச்சிப்பகுதி, அந்த ஆற்றலை, பிரமிடின் உள்பகுதியில் ஒரே சீராகப் பரவ வைக்கிறது. இதுதான் ரகசியம் என்கிறார்கள்.
இது முழுமையான விளக்கமா? சரி என்று ஒத்துக்கொண்டாலும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், எகிப்தியர்களுக்கு இந்த விஞ்ஞான உண்மை எப்படித் தெரிந்தது, புரிந்தது?

பெரிய பிரமிட்

கிஸா (Giza) நகரில் இருக்கும் பெரிய பிரமிட் சுமார் 476 அடி உயரமானது, 13.6 ஏக்கர் நிலப் பரப்பு கொண்டது 5,90,712 கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கம்ப்யூட்டர் கணக்கீடுகள் சொல்கின்றன. கற்களின் எடை ஒவ்வொன்றும் இரண்டில் இருந்து முப்பது டன் வரை. இந்தக் கற்களை தூரத்தில் இருக்கும் மலைப் பகுதிகளில் இருந்து எப்படிக் கொண்டு வந்தார்கள்? உச்சியை எட்டும்போது கற்களை 400 அடிகளுக்கு மேல் தூக்கிக் கொண்டு போயிருக்க வேண்டுமே? அவர்களிடம் கிரேன் மாதிரி எந்திரம் இருந்ததா? ஒரு லட்சம் தொழிலாளிகள் இருபது வருடம் பணியாற்றியிருந்தால் மட்டுமே பெரிய பிரமிட் உருவாகியிருக்கும் என்பது கட்டடக் கலை வல்லுநர்கள் கணிப்பு.

கோவில்கள்

பெரிய பிரமிட் பிரம்மாண்டம் என்று நினைக்கிறீர்களா? இதோ வருகிறது நிஜ பிரமாண்டம். கார்நாக் (Karnak) எகிப்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் கிராமம். ஆலயங்கள் நிறைந்த இடம். சிதிலமாகிவிட்ட பல கோவில்கள் நெஞ்சில் துயரம் பொங்க வைக்கின்றன.

இங்கே இருக்கும் ஆமுன் ரே (Amun Re) கோவில் எகிப்தின் மற்ற எல்லாக் கோவில்களையும்விட மிகப் பெரியது. ஆமுன் ரே எகிப்தியரின் முழுமுதற் கடவுள். நாட்டையும், மன்னர்களையும், மக்களையும், எல்லாத் துன்பங்களிலிருந்தும், எப்போதும் காப்பாற்றுபவர் என்பது பொது நம்பிக்கை.
ஆமுன் ரே கோவிலில் இருக்கும், கி.மு. 14 – ம் நூற்றாண்டில், இரண்டாம் ராம்சேஸ் மன்னரால் கட்டப்பட்ட அரங்கம் முக்கிய அம்சம். ஹைப்போ என்னும் வித்தியாசமான கட்டடக் கலைப் பாணியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. தாங்கும் வளைவுகள் இல்லாமல், வரிசையாகத் தூண்களை நிறுவி, அவற்றின்மேல் தட்டையான கூரை அமைக்கும் முறை இது.  அரங்கம் எத்தனை பெரியது தெரியுமா? பரப்பளவு 52,000 சதுர அடி. 16 வரிசைகளில், 134 தூண்கள் அரங்கத்தைத் தாங்கி நிற்கின்றன. இவை ஒவ்வொன்றின் சுற்றளவு 10 அடி. 122 தூண்களின் உயரம்  33 அடி: எஞ்சிய 12 தூண்களின் உயரம் 70 அடி. அம்மாடியோவ்!

தொழில்கள் – மீன் பிடித்தல்

விவசாயம்தான் முக்கிய தொழில். பெரும்பாலான மக்கள் மீனை விரும்பி உண்டதால், மீன்களுக்கான தேவை அதிகமானது. பலர் மீன் பிடித்தல், மீன் வியாபாரம் ஆகியவற்றை முழு நேர வேலைகளாகச் செய்யத் தொடங்கினார்கள். நாளாவட்டத்தில் மீன் பிடிக்கும் படகுகளையும் பயன்படுத்தினார்கள்.

சிற்பக் கலை

கோவில்களையும், வீடுகளையும் அற்புதச் சிற்பங்கள் அலங்கரித்தன. கடவுள்களுக்கு மட்டுமல்லாமல், அரசர்கள். பிரமுகர்கள் ஆகியோருக்கும் சிலைகள் வடிப்பது பண்டைய எகிப்து வழக்கம். கல் தச்சர்கள், சிற்பிகள் எனப் பல கலைஞர்களை இந்த வழக்கம் ஊக்குவித்தது. கல்லால் சிற்பங்கள் மட்டுமல்ல, அம்மி, ஆட்டுக்கல் போன்ற சமையல் சாமான்களும் தயாரிக்கப்பட்டன.

களிமண் பொருட்கள் தயாரிப்பு

செங்கற்கள் தயாரித்த முறையில், உணவு சமைக்கும் பாத்திரங்கள், தானியம், எண்ணெய், மாவு, தண்ணீர், ஒயின் ஆகியவற்றைச் சேமித்து வைக்கும் பெட்டிகள் ஆகியவையும் தயாரிக்கப்பட்டன.

பெண்களின் தொழில்கள்  

பெண்கள் வேலை பார்ப்பதைச் சமுதாயம் அனுமதித்தது. பேரிச்சை மர இலை, கோரம்புல் ஆகியவற்றால் பின்னப்பட்ட கூடைகளும் பல அகழ்வு ஆராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. கூடை பின்னுதல், வாசனைப் பொருட்கள் தயாரித்தல், ஆடைகள் தைத்தல், நகைகள் செய்தல் ஆகிய தொழில்களில் பெரும்பாலும் ஈடுபட்டிருந்தவர்கள் பெண்களே.

தொழிற்சாலைகள்

எகிப்தில் கிரானைட் கற்கள், பல வித மாணிக்கங்கள், தங்கம், ஈயம், இரும்பு சுண்ணாம்புக் கல், ஆகிய தாதுக்கள் ஆகியவை தாராளமாகக் கிடைத்தன. இவற்றின் அடிப்படையில் பல தொழிற்சாலைகள்  தொடங்கினார்கள். சிமெண்ட் தயாரித்தார்கள். கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பில் அவர்களுக்கு அபாரத் திறமை. கண்ணாடி ஜாடிகள், சிற்பங்கள், நகைகள் ஆகியவை பரவலாக உபயோகத்தில் இருந்தன.

வணிகம்

வணிகம் தழைத்து வளர்ந்தது. சந்தைகள் இருந்தன. அங்கே கல் எடைகள் பயன்படுத்தப்பட்டன.  உணவு தானியங்கள், உற்பத்திப் பொருட்கள், உப்பு, ஆகியவை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மரக்கட்டைகள், வாசனைப் பொருட்கள், ஆலிவ் எண்ணெய் ஆகிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தொலைதூர ஆப்கானிஸ்தானிலிருந்து  லாப்பிஸ் வைடூரியங்களை இறக்குமதி செய்ததாக ஆதாரங்கள் சொல்கின்றன. பல வியாபாரிகள் இந்த ஏற்றுமதி இறக்குதி வாணிபத்தில் ஈடுபட்டார்கள். உள் நாட்டு வாணிபத்திலும், ஏற்றுமதியிலும் பண்டமாற்று முறைதான் உபயோகத்தில் இருந்தது.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்